ADDED : பிப் 13, 2025 10:01 PM
டில்லியில் 100 நாள் செயல் திட்டத்துடன் பதவியேற்க பா.ஜ., தயாராகி வருவது தெரிய வந்துள்ளது.
டில்லியில் 26 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை பா.ஜ., கைப்பற்றியுள்ளது. ஒவ்வொரு அடியாக நிதானத்துடனும் உத்வேகத்துடனும் செயல்பட, அக்கட்சித் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
பதவியேற்கும் முன்பே அடுத்த 100 நாட்களுக்கான செயல் திட்டங்களை தயாரிக்கும்படி தலைமைச் செயலர் வாயிலாக அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநில தலைமைச் செயலர் தர்மேந்திரா, துறைத்தலைவர்களுடன் சமீபத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, துறை வாரியாக அடுத்த 100 நாட்களுக்குள் முடிக்க வேண்டிய பணிகளை பட்டியலிட்டு அறிக்கையாக தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் உத்தரவிட்டார்.
அந்த அறிக்கையில், ஒரு வாரத்திற்கான இலக்கு, 15 நாட்களுக்கான இலக்கு, ஒரு மாதத்திற்கான இலக்கு என, 100 நாட்களுக்கும் பிரித்து தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
முந்தைய ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தாத மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டு, அவற்றை உடனடியாக அமல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தி, அறிவுரை வழங்கியதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அறிக்கைகளாக தாக்கல் செய்யும்படி, தலைமைச் செயலரை பா.ஜ., வட்டாரங்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
அத்துடன் மாநகராட்சியுடன் இணைந்து அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கான ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

