ADDED : டிச 03, 2024 07:52 AM

பெங்களூரு: முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமையை ரத்து செய்யும்படி பேசிய மடாதிபதி, 'புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை' என போலீசுக்கு பதில் அனுப்பி உள்ளார்.
விஸ்வ ஒக்கலிகர் மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் குமார் சந்திரசேகரநாத சுவாமிகள். விவசாய நிலங்களை, வக்பு ஆணையம் கைப்பற்றுவதாகக் கூறி, கடந்த மாதம் பெங்களூரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், 'முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டும்' என பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன், உப்பார்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், 2ம் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி, மடாதிபதிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதற்கு பதில் அளித்து சுவாமிகள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
எனக்கு 81 வயதாகிறது. இறுதிகட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தினமும் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த மூன்று - நான்கு நாட்களாக, டாக்டர் பரிசோதித்து, பத்து நாட்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். எனவே, நீங்கள் பரிந்துரைத்த நாளில், என்னால் விசாரணைக்கு வர இயலாது.
மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, 18ம் தேதி ஓய்வு முடிவடைகிறது. அன்று மதியம் 3:00 மணிக்கு உடல்நிலை சீரடைந்தால் விசாரணைக்கு வருவேன்.
அப்போதும் உடல்நிலை மோசமடைந்தால் வர முடியாது. விசாரணை அதிகாரிகள், என்னிடம் விசாரணை நடத்த விரும்பினால், எங்கள் மடத்துக்கு வந்து, அறிக்கை பதிவு செய்யலாம்.
எனக்கு ஆட்சேபனை இல்லை. என் பேச்சின் தவறான புரிதலுக்கு நான் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டேன். இதை தொடராமல் வழக்கை முடித்து வைக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.