சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்ட மத்திய அரசு உறுதி! பார்லி., கூட்டுக்குழு உரையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்ட மத்திய அரசு உறுதி! பார்லி., கூட்டுக்குழு உரையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
UPDATED : ஜன 29, 2026 04:41 AM
ADDED : ஜன 29, 2026 01:00 AM

''உண்மையான சமூக நீதியை நிலைநாட்டவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்டவும், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடையவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது,'' என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. பிப்., 1ல், 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், பார்லி., கூட்டுக்குழுக் கூட்டத்தில் உரையாற்ற நேற்று வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டுக்குழுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சங்கள்:
* 'வந்தே மாதரம்' பாடல் இயற்றப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டங்கள், குருதேக் பகதுாரின், 350வது நினைவு தினம், பிர்சா முண்டாவின், 150வது பிறந்த தினம், சர்தார் வல்லபபாய் படேலின், 150வது பிறந்த தினம் என, நம் நாட்டின் முன்னோரையும், அவர்களின் பங்களிப்பையும் நினைவுகூரும் விதமாக, கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள், நம் புதிய தலைமுறையினருக்கு மிகுந்த ஊக்கத்தை அளிப்பதோடு, 'வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை நோக்கிய பயணத்தை மேலும் விரைவுபடுத்தும்
* எந்த பாகுபாடுமின்றி ஒவ்வொரு குடிமகனும் அரசியலமைப்பு சட்டத்தின் முழு உரிமையை பெற வேண்டும். உண்மையான சமூக நீதியை நிலைநாட்டவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்டவும், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடையவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது
* ஊழல் இல்லாத நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதில் அரசு வெற்றி கண்டு வருகிறது
* நீர், நிலம், காற்று சார்ந்த அனைத்து துறைகளிலும் நம் நாடு முன்னேறி வருகிறது. நாட்டின் இந்த வளர்ச்சி, உலகளவில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறி வருகிறது
* தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரின் நலன்களே, மத்திய அரசின் இலக்கு. மத்திய அரசின், 'அனைவருக்குமான வளர்ச்சி' என்ற நோக்கம், ஒவ்வொரு குடிமகனுக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.
* கடந்த, 2014 துவக்கத்தில், சமூக பாதுகாப்பு திட்டங்கள் 25 கோடி மக்களை மட்டுமே சென்றடைந்தது. அரசின் தொடர் முயற்சியால், தற்போது சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம், 95 கோடி மக்கள் பயனடைகின்றனர்
* கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட, 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த புதிய சீர்திருத்தம் மூலம், 125 நாட்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் கிடைத்துள்ளது. இத்திட்டம், ஊழலை ஒருபோதும் ஊக்குவிக்காது
* ஊரகப் பகுதிகளில் ஓரா ண்டில் மட்டும், 18,000 கி.மீ., துாரத்துக்கு சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளன
* ரயில்வே திட்டங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருவதால், நாடு முழுதும் தற்போது, 150 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் பாதைகள் முற்றிலுமாக, 100 சதவீத மின் மயமாக்கப்பட்டு விட்டது என்ற இலக்கை வெகு விரைவில் ரயில்வே துறை அடைய உள்ளது
* நாடு முழுதும் மக்களுக்கு மத்திய அரசின் சார்பில், 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன
* மீன் உற்பத்தியில், உலகளவில் இரண்டாவது இடத்தில் நம் நாடு உள்ளது
* உணவு உற்பத்தி 35 கோடி டன்களை தாண்டி விட்டது. அரிசி உற்பத்தியில், உலகில், மூன்றாவது இடத்தில் நம் நாடு உள்ளது
* 'மொபைல் போன்' உற்பத்தியில், உலகின் இரண்டாவது பெரிய நாடாக நம் நாடு உருவெடுத்துள்ளது
* இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான ஒப்பந்தங்கள், நம் நாட்டின் உற்பத்தித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்
* பயங்கரவாதத்தை ஒருபோதும் சகிக்க முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது
* நக்சல்களின் நடமாட்டம், 126 மாவட்டங்களில் முன்பு இருந்தது. அரசின் தொடர் நடவடிக்கைகளால், தற்போது அது, 8 மாவட்டங்கள் என சுருங்கி விட்டது. கடந்த ஆண்டு மட்டும், நக்சல் அமைப்பைச் சேர்ந்த 2,000 பேர் சரண் அடைந்துள்ளனர். விரைவில், நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்படுவர்
* பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்க்கைத்தரம் வெகுவாக வளர்ச்சி கண்டுள்ளது
* தேசிய பாதுகாப்பு அகாடமி படிப்பில், முதன்முறையாக பெண்களும் பட்டம் பெற்றுள்ளதன் மூலம், நம் நாட்டின் பெண்கள் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது
* பிற்படுத்தப்பட்ட மக்களை நலத்திட்டங்கள் வாயிலாக முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டுமென்பதே அரசின் நோக்கம்
* சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நம் வீரர் சுபான்ஷு சுக்லா மேற்கொண்ட பயணம் வரலாற்று சிறப்புமிக்கது. விண்வெளியில் சொந்தமாகவே விண்வெளி மையத்தை அமைக்க, வரும் ஆண்டுகளில் நம் நாடு நடவடிக்கை எடுக்கும். 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடக்கின்றன
* மத்திய அரசின், 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' வாயிலாக, ஏழைகள், நடுத்தர மக்கள் பயனடையும் விதத்தில், கடந்த ஆண்டில் கொண்டு வரப்பட்ட அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் மூலம், மக்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரை மிச்சமாகி உள்ள து
* வருமான வரிச்சட்டம் கொண்டு வந்து, 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது, அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு
* 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை, நம் நாட்டின் வலிமையை வெளிப்படுத்தி உள்ளதோடு, பயங்கரவாத தாக்குதலுக்கு சரியான பதிலடி தரப்படும் என்ற தெளிவான செய்தியையும் தந்துள்ளது.

- நமது டில்லி நிருபர் -

