UPDATED : பிப் 18, 2024 06:52 AM
ADDED : பிப் 18, 2024 01:12 AM

பாட்னா, பீஹாரில் துணை முதல்வராக இருந்தபோது, தேஜஸ்வி யாதவ் மற்றும் இரண்டு ராஷ்ட்ரீய ஜனதா தள அமைச்சர்கள் எடுத்த துறை ரீதியிலான முடிவுகளை மறு ஆய்வு செய்ய, பீஹார் அரசு உத்தரவிட்டு உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
முன்பு ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சி நிதீஷ் குமார் ஆட்சி நடத்திய போது, அக்கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக இருந்தார்.
ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த லலித் யாதவ் மற்றும் ராமானந்த் யாதவ் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர்.
அக்கட்சியின் கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய நிதீஷ் குமார், பா.ஜ.,வுடன் கைகோர்த்தார்.
இதையடுத்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியை இழந்தது.
கடந்த ஜன., 28ல், புதிய அரசை அமைத்த நிதீஷ், அதற்கடுத்து நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற்றார். அப்போது, முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தேஜஸ்வி துணை முதல்வராக இருந்து நிர்வகித்த அமைச்சரவை செயலகத் துறை, சுகாதாரம், சாலை கட்டுமானம், நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் ஊரகப் பணிகள் துறைகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மறு ஆய்வு செய்ய பீஹார் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், அமைச்சர்கள் இருவரும் நிர்வகித்த பொது சுகாதார பொறியியல் துறை, சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆகியவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் மறுஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளன. அது குறித்து விசாரணை நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தேன். அதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.
நிதீஷ் குமார்
பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்