ADDED : பிப் 22, 2024 06:49 AM

பெங்களூரு: பெங்களூரு ரூரல் தொகுதியில், காங்., -- எம்.பி., சுரேஷை தோற்கடிக்க, பா.ஜ., - ம.ஜ.த., திட்டம் வகுக்கின்றன. தம்பிக்கு துணை நிற்க, துணை முதல்வர் சிவகுமார் முடிவு செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலில், பெங்களூரு ரூரல் தொகுதியில் இம்முறையும் காங்கிரஸ் வேட்பாளராக சுரேஷ் போட்டியிட வாய்ப்புள்ளது.
இவரை பா.ஜ., - ம.ஜ.த., குறி வைத்துள்ளன. சுரேஷை தோற்கடித்து, துணை முதல்வர் சிவகுமாரின் செல்வாக்கை குறைக்க, கூட்டணி கட்சிகள் ஆர்வம் காண்பிக்கின்றன.
பெங்களூரு ரூரலில் வலுவான வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளன. இதை உணர்ந்துள்ள சிவகுமார், தன் தம்பிக்கு துணை நிற்க முடிவு செய்துள்ளார்.
மற்ற தொகுதிகளை விட, பெங்களூரு ரூரலில் அதிகமாக பிரசாரம் செய்யும் நோக்கில், பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ராம்நகர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.
வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிவகுமார். நாள் முழுதும் கனகபுராவில் இருந்தார். வரும் நாட்களில் தன் செல்வாக்கு முழுதையும் பிரயோகித்து, தம்பியை வெற்றி பெற வைக்க உறுதி பூண்டுள்ளார். பெங்களூரு ரூரல் தொகுதி கை நழுவக்கூடாது என்பதில், சிவகுமார், சுரேஷ் ஆகிய இருவருமே உறுதியாக உள்ளனர்.
ஏனென்றால் கடந்த லோக்சபா தேர்தலில், 28 தொகுதிகளில் பெங்களூரு ருரல் ஒன்றில் மட்டுமே காங்., வெற்றி பெற்றது. கட்சியின் மானத்தை காப்பாற்றிய தொகுதியை தக்க வைத்துக்கொள்ள, காங்கிரஸ் மேலிடமும் மும்முரமாக உள்ளது.