5 கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுப்பதிவு முழு விவரம் வெளியிட்டது தேர்தல் ஆணையம்
5 கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுப்பதிவு முழு விவரம் வெளியிட்டது தேர்தல் ஆணையம்
UPDATED : மே 25, 2024 05:51 PM
ADDED : மே 25, 2024 05:11 PM

புதுடில்லி : லோக்சபாவுக்கு நடந்து முடிந்த 5 கட்ட தேர்தலில், மாநிலம், தொகுதி வாரியாக எத்தனை பேர் ஓட்டுப் போட்டனர், எத்தனை சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன போன்ற விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.


லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 48 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ ஓட்டு சதவீதத்தை அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று ( மே 24) விசாரணைக்கு வந்த போது, சந்தேகத்தின் அடிப்படையிலும், அவநம்பிக்கை ஏற்படுத்தவே மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சந்தேகம் எழுப்பி மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்தால் ஓட்டளிக்க வருவதை குறைக்கும். தேர்தல் நடக்கும் காலத்தில் இதுபோன்ற மனுக்கள் எதையும் நீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் வாதிட்டது. இதனையடுத்து, தற்போதைய சூழ்நிலையில் மனுவை விசாரிக்க விரும்பவில்லை எனக்கூறி உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்து உள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் முதல் 5 கட்ட தேர்தலில், மாநில வாரியாக தொகுதி வாரியாக மொத்தம் எத்தனை ஓட்டுகள், எத்தனை ஓட்டுகள் பதிவாகியது, ஓட்டு சதவீதம் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பான விவரங்களுடன் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கும் தவறான கதைகள் கட்டமைக்கப்படுகின்றன. பதிவான ஓட்டுகளை மாற்றுவது சாத்தியம் இல்லாதது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

