கடத்தப்பட்ட அரசு டாக்டரை இறக்கி விட்டு ஓடிய கும்பல்
கடத்தப்பட்ட அரசு டாக்டரை இறக்கி விட்டு ஓடிய கும்பல்
ADDED : ஜன 26, 2025 11:04 PM

பல்லாரி: பல்லாரி நகரின், சத்ய நாராயணாபேட்டில் வசிப்பவர் டாக்டர் சுனில், 45. இவர் பல்லாரி அரசு மருத்துவமனையில், டாக்டராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு வீட்டு அருகில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மர்ம கும்பல், அவரை காரில் கடத்தி சென்றது. அவரது மொபைல் போனில் இருந்தே, அவரது தம்பியும், மாவட்ட மதுபான விற்பனையாளர்கள் சங்க தலைவருமான வேணுகோபாலை தொடர்பு கொண்டு, 6 கோடி ரூபாயும், தங்கமும் வழங்க வேண்டும் என, மிரட்டினர்.
இது தொடர்பாக, அவர் பல்லாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் தனிப்படை அமைத்து, கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தின் சுற்றுப்பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பரிசீலித்த போது, கடத்தல் கும்பலின் கார் பல்லாரி புற நகர்ப்பகுதியை நோக்கி சென்றது தெரிந்தது.
இதை வைத்து மர்ம கும்பலை தேடினர். இதற்கிடையே டாக்டர் சுனிலை காரில் வைத்து கொண்டு, பல்வேறு இடங்களில் சுற்றிய மர்ம நபர்களுக்கு, போலீஸ் பற்றிய பயம் ஏற்பட்டது. எனவே நேற்று காலை, பல்லாரி, குருகோடுவின், சோமசமுத்ரா கிராமத்தின் வயலில், சுனிலை தாக்கி, காரில் இருந்து இறக்கி விட்டுவிட்டு, மர்ம கும்பல் தப்பியோடியது.
சுனில் அப்பகுதியினர் உதவியுடன், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பின் அங்கு வந்த போலீசார், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மர்ம கும்பலை தேடுகின்றனர். அவர்களை பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை.
நடந்த சம்பவத்திற்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி, கண்டனம் தெரிவித்துள்ளார். மாதிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளது எனவும், டாக்டரை கடத்தியவர்களை கண்டுபிடித்து தண்டிக்கும்படியும் வலியுறுத்தியுள்ளார்.

