'பல்லாரி அரசு மருத்துவமனையில் பெண்கள் இறந்ததற்கு அரசே காரணம்'
'பல்லாரி அரசு மருத்துவமனையில் பெண்கள் இறந்ததற்கு அரசே காரணம்'
ADDED : டிச 02, 2024 04:30 AM

பல்லாரி: ''பல்லாரி அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்கு பின்பு பெண்கள் இறந்ததற்கு அரசே நேரடி காரணம்,'' என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம் சாட்டி உள்ளார்.
பல்லாரி அரசு மருத்துவமனையில் கடந்த 20 நாட்களில் பிரசவத்திற்கு பின் நான்கு பெண்கள் இறந்தனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தரமற்ற குளுக்கோஸ் செலுத்தியதே, பெண்கள் இறப்புக்கு காரணம் என்று தெரிந்தது.
இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், பல்லாரி அரசு மருத்துவமனைக்கு நேற்று சென்றார். பெண்கள் மரணம் தொடர்பாக மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் தகவல் பெற்றார்.
பின், அவர் அளித்த பேட்டி:
'வெஸ்ட் பங்கா பார்மசூட்டிக்கல்' நிறுவனத்தின் குளுக்கோஸ் தரமற்றது என்று தெரிந்திருந்தும், யாருடைய அழுத்தத்தின் கீழ் அரசு வாங்கியது என்று தெரியவில்லை. ஆறு மாதத்திற்கு முன்பே அந்த நிறுவனத்தின் குளுக்கோஸ் மோசமாக உள்ளதாக, மருந்து கட்டுப்பாட்டாளர்கள் கூறினர்.
குளுக்கோஸ் செலுத்தியதால் பெண்கள் இறந்ததற்கு அரசே முழு பொறுப்பு. அந்த மருந்து நிறுவனத்தை சேர்ந்த அன்சாரி என்பவரை கைது செய்தால் மட்டுமே, இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று தெரியும்.
உயிரிழந்த பெண்கள் குடும்பத்திற்கு அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.
ஏழைகளின் உயிரின் மதிப்பு அரசுக்கு தெரியாதா. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாயை அரசு வழங்க வேண்டும். அரசுக்கு மானம், மரியாதை இல்லையா? இதுவரை சுகாதார அமைச்சர் வல்லாரைக்கு வரவில்லை. பெண்கள் மரணத்திற்கு பொறுப்பேற்று அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை 28 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர். இதுகுறித்து லோக் ஆயுக்தா தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நான் புகார் செய்வேன்.
இந்த ஆட்சியில் விவசாயிகளும், அதிகாரிகளும் தற்கொலை செய்து கொள்கின்றனர். நிலைமை இப்படி இருக்கும்போது ஹாசனில் மாநாடு நடத்தி என்ன பயன்.
இவ்வாறு அவர் கூறினார்.