பாகிஸ்தான் ஆதரவு கோஷம் விவகாரம் 2வது நாளாக பா.ஜ.,வினர் போராட்டம்
பாகிஸ்தான் ஆதரவு கோஷம் விவகாரம் 2வது நாளாக பா.ஜ.,வினர் போராட்டம்
ADDED : மார் 01, 2024 06:30 AM

பெங்களூரு: பெங்களூரு விதான் சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய சம்பவம் தொடர்பாக, மாநில அரசை கண்டித்தும், அந்நபரை கைது செய்ய வலியுறுத்தியும் எதிர்க்கட்சியினர் இரண்டாவது நாளாக சட்டசபை, மேலவையில் நேற்றும் தர்ணா நடத்தினர்.
அரசின் பதில் திருப்தி அளிக்காததால், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் அரசை நீக்க வலியுறுத்தி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தனர்.
கர்நாடகாவில் இரண்டு நாட்களுக்கு முன், ராஜ்யசபா எம்.பி., தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கைக்கு பின், வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சையத் நாசிர் உசேன் ஆதரவாளர்கள், பெங்களூரு விதான் சவுதாவில் வெற்றியை, கொண்டாடினர்.
அப்போது, ஊடகங்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்த போது, அவரது பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று இரண்டு முறை கோஷம் எழுப்பினார். இந்த வீடியோ 'டிவி' சேனல்களிலும், சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை, மேலவை
இந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்று, முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பா.ஜ., தரப்பில், சட்டசபை, மேலவையில் இரண்டாவது நாளாக நேற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சட்டசபை நேற்று காலை துவங்கியதுமே, பா.ஜ., உறுப்பினர்கள் சபாநாயகர் காதர் முன், தர்ணாவில் ஈடுபட்டு அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் அசோக்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி, 48 மணி நேரம் கடந்தும், இதுவரை ஒரே ஒரு நபர் கூட கைது செய்யப்படவில்லை. நாசிர் உசேன் கைது செய்யப்படவில்லை.
யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. அரசு மெத்தனமாக செயல்படுகிறது. ஏதோ சிறிய சம்பவமாக அரசு கருதுகிறது.
நாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று மக்கள், இந்த ஆட்சியை தேர்வு செய்துள்ளனர். ஆனால், பாதுகாப்பே இல்லை. விதான் சவுதா, பயங்கரவாதிகளின் பதுங்குமிடமாக உள்ளது.
சபாநாயகர் காதர்: சம்பவம் தொடர்பாக அரசு விசாரணை நடத்தி வருகிறது. ஆனாலும் தர்ணா நடத்துவது சரியில்லை. பட்ஜெட் மீதான விவாதத்துக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும். தர்ணாவை கை விடுங்கள்.
எதிர்க்கட்சி தலைவர்: கோஷம் எழுப்பியவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அரசு அவர்களை பாதுகாக்கிறது.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர்: ஏழு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆடியோ, வீடியோ தொடர்பான தடயவியல் அறிக்கை வந்தால், உண்மை தெரியும். தவறு செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
எதிர்க்கட்சி தலைவர்: இன்னும் விசாரணை நடத்துவதாக கூறுகிறீர்கள். அவர்களை பாராட்டி சால்வை அணியுங்கள். கோஷம் எழுப்பியவர்களை உதைத்து சிறையில் அடைப்பதை விட்டு விட்டு, விசாரணை நடத்துவதாக கூறுகிறீர்களே.
முதல்வர் சித்தராமையா: இந்த சம்பவத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. ஏற்கனவே ஏழு பேரை அழைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது உண்மை என்று நிரூபணம் ஆனால், அத்தகையோரை பாதுகாக்கும் கேள்வியே எழாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேச பக்தியை, நாங்கள் பா.ஜ.,விடம் இருந்து கற்க வேண்டியது இல்லை. காங்கிரஸ் தலைவர்கள், பா.ஜ., தலைவர்களை விட 100 மடங்கு அதிக தேச பக்தி கொண்டவர்கள்.
(இதை ஏற்க மறுத்த பா.ஜ.,வினர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது)
கவர்னரிடம் மனு
தர்ணாவுக்கு இடையில், பட்ஜெட் மீதான விவாதத்துக்கு முதல்வர் பதில் அளித்து கொண்டிருந்தார். அப்போது, 'இது ஒரு தகுதியற்ற அரசு' என்று கூறி, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
பின், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, கர்நாடக அரசை பதவிநீக்கம் செய்யும்படி வலியுறுத்தி மனு அளித்தனர்.

