சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு விவகாரம் மேலவையில் காரசார விவாதம்
சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு விவகாரம் மேலவையில் காரசார விவாதம்
ADDED : பிப் 15, 2024 05:12 AM

பெங்களூரு, : கர்நாடகாவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்தது தொடர்பாக, பா.ஜ., - காங்கிரஸ் உறுப்பின்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக மேலவை தலைவர் 'பசவராஜ் ஹொரட்டி, விதி 72ன் கீழ் விவாதிக்கப்படும்' என தெரிவித்தார்.
சட்ட மேலவையில் நேற்று நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி: பெலகாவி உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் பல அசம்பாவித சம்பவங்கள் நடந்துஉள்ளன.
பெங்களூரில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இது தொடர்பாக விதி 59ன் கீழ் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர்: இது தொடர்பாக சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதே, இதை கவர்னர் உரையின் மீது விவாதம் நடத்தலாம் என கூறியுள்ளேன்.
(இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பா.ஜ., - காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது)
மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி:
விதி 59ன் கீழ் விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது. விதி 72 ன் கீழ் விவாதிக்கலாம்.
குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர்: நான் விஷயத்தை இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. அதற்குள் விதி 72ன் கீழ் விவாதிக்கலாம் என கூறிவிட்டீர்களே.
(அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் குறுக்கிட்டு, 59ன் கீழ் விவாதிக்க முடியாது. 72ன் கீழ் தான் விவாதிக்க முடியும் என கூறினர்.
ஆனால் பா.ஜ.,வினர், 59ன் கீழ் தான் விவாதிக்க வேண்டும் என்றனர். இதனால் இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது)
மேலவை தலைவர்: நான் ஒருமுறை தீர்ப்பு கொடுத்த பின், மீண்டும் வாக்குவாதம் செய்வது சரியல்ல. விதி 72ன் கீழ் விவாதிக்கவும். எனது தீர்ப்பை எதிர்த்து நீங்கள் பேச வேண்டாம்.
எதிர்க்கட்சி தலைவர்: உங்கள் தீர்ப்பை எதிர்த்து நான் கேள்வி கேட்கவில்லை. ஆனால், இன்னும் விஷயத்தை முன்வைக்கவில்லை. இவ்விஷயத்தை முன்வைக்க எனக்கு அவகாசம் கொடுங்கள்.
(அப்போது காங்கிரசார் விதி 72 ன் கீழ் தான் விவாதிக்கப்படும் என்றனர். இதனால் மீண்டும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது)
இறுதியில் எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி, மேலவை தலைவர் தீர்ப்பை மிகுந்த வேதனையுடன் ஏற்பதாக கூறி, அமர்ந்தார்.

