காதலிக்கு ரூ.3 கோடியில் பங்களா 'பலே' திருடனின் உல்லாச வாழ்க்கை
காதலிக்கு ரூ.3 கோடியில் பங்களா 'பலே' திருடனின் உல்லாச வாழ்க்கை
ADDED : பிப் 05, 2025 06:42 AM

மடிவாளா: பெங்களூரில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட, மஹாராஷ்டிரா மாநில 'பலே' திருடன், கோல்கட்டா காதலிக்கு 3 கோடி ரூபாயில் சொகுசு பங்களா கட்டிக் கொடுத்துள்ளது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி:
பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய, மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரை சேர்ந்த பஞ்சாக் ஷரி சாமி, 37, என்பவரை மடிவாளா போலீசார் கைது செய்தனர்.
இவரிடம் இருந்து 181 கிராம் தங்க கட்டிகள், 333 கிராம் வெள்ளிப் பொருட்கள், தங்கத்தை உருக்க பயன்படுத்தப்படும் கம்பி, ஒரு துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பஞ்சாக் ஷரி சாமியின் தந்தை, ரயில்வேயில் பணியாற்றினார். அவர் இறந்த பின், அவர் மனைவிக்கு வேலை கிடைத்தது. பஞ்சாக் ஷரி சாமிக்கு திருமணம் முடிந்து மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.
நடிகைக்கு செலவு
சோலாப்பூரில் 400 சதுர அடி வீட்டில் தான் பஞ்சாக் ஷரி சாமியின் தாய், மனைவி, குழந்தை வசிக்கின்றனர். இந்த வீட்டின் மீது கடன் வாங்கி உள்ளனர். கடனை செலுத்தாததால் வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த வீடு தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2003ல் மைனராக இருந்தபோதே, பஞ்சாக் ஷரி சாமி திருட ஆரம்பித்தார். 2009ல் இருந்து தொழில்முறை திருடனாக மாறிவிட்டார்.
பல்வேறு வீடுகளில் திருடிய நகை, வெள்ளி பொருட்களை விற்று, கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தினார். மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒரு நடிகைக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நடிகைக்காக கோடி கணக்கில் பணம் செலவழித்துள்ளார். 2016ல் கோல்கட்டாவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
பின், காதலாக மாறியது. காதலிக்காக கோல்கட்டாவில் 3 கோடி ரூபாயில் சொகுசு பங்களா கட்டிக் கொடுத்துள்ளார். காதலியின் பிறந்தநாளுக்கு 22 லட்சம் ரூபாய்க்கு பரிசும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
கடந்த 2016ல் திருட்டு வழக்கில் குஜராத் போலீ சாரால் கைது செய்யப்பட்டு, சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், 2022ல் வெளியில் வந்து மீண்டும் திருட ஆரம்பித்தார்.
4 மாநிலங்கள்
மஹாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கைவரிசை காட்டினார். மூன்று மாநிலங்களிலும் அவர் மீது 180 வழக்குகள் உள்ளன.
திருடப்படும் தங்க நகைகளை உருக்கி விற்பனை செய்துள்ளார். ஒரு வீட்டில் திருடிவிட்டு வெளியே வந்த பின், உடைகளை மாற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். கண்காணிப்பு கேமராவில் இருந்து தப்பிக்க இதுபோன்று செய்துள்ளார்.
கராத்தேயில் கருப்பு பெல்ட்டும் வாங்கி உள்ளார். அவரது காதலியிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளோம். மீதமுள்ள நகைகளை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.