பலாத்கார வழக்கை வாபஸ் பெற மறுத்த பெண்ணை தாக்கியவர் கைது
பலாத்கார வழக்கை வாபஸ் பெற மறுத்த பெண்ணை தாக்கியவர் கைது
ADDED : பிப் 28, 2024 12:15 AM
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், பாலியல் பலாத்கார வழக்கை திரும்பப் பெற மறுத்த பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தானின் கோட்புட்லி- - பெஹ்ரோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர யாதவ். இவர், கடந்த ஆண்டு ஜனவரியில், பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த இவர், பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து, தன் மீதான பலாத்கார வழக்கை திரும்ப பெறும்படி வற்புறுத்தி வந்தார். இதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை.
சமீபத்தில், ஜெய்ப்பூரில் உள்ள பிரக்புரா போலீஸ் ஸ்டேஷன் அருகே, தன் சகோதரருடன், பாதிக்கப்பட்ட பெண் இருசக்கர வாகனத்தில் சென்றார். அவர்களை பின்தொடர்ந்து வந்த ராஜேந்திர யாதவ் மற்றும் அவரது நண்பர்கள், இருவரையும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கினர்.
யாதவ் துப்பாக்கியால் சுட்டதில், அந்தப் பெண்ணுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த பெண் மற்றும் அவரது சகோதரரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், யாதவின் நண்பர்கள் இருவரை கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், ஜெய்ப்பூரில் ரயிலில் அடிபட்டு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த முக்கிய குற்றவாளி ராஜேந்திர யாதவை போலீசார் கைது செய்தனர்.

