ADDED : நவ 05, 2024 04:33 PM

புதுடில்லி: நவம்பர் 25ம் தேதி பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது, என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.
இது குறித்து கிரண் ரிஜிஜூ கூறியதாவது: குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், பார்லிமென்ட்டின் இரு அவைகளும் நவம்பர் 25ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடக்க உள்ளது.
நம் அரசியலமைப்பு சட்டம், 1949 நவம்பர் 26ல் வரலாற்றுச்சிறப்பு மிக்க பார்லிமென்ட் மைய மண்டபத்தில் கூடிய அரசியலமைப்பு நிர்ணயசபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1950 ஜனவரி 26ல் அமலுக்கு வந்தது.
அரசியலமைப்புச் சட்டம் அரசியல் நிர்ணயசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரு சபைகளின் சிறப்பு கூட்டுக் கூட்டம் பழைய பார்லிமென்டின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மைய மண்டபத்தில் வரும் 26ல் நடைபெறவுள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய அடுத்த நாளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.