மீண்டும் பரோல் கேட்ட சாமியார் :தேர்தல் அலுவலரை கை காட்டிய ஹரியானா அரசு
மீண்டும் பரோல் கேட்ட சாமியார் :தேர்தல் அலுவலரை கை காட்டிய ஹரியானா அரசு
ADDED : செப் 29, 2024 08:45 PM

சண்டிகர் : கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், மீண்டும் 20 நாள் பரோல் கேட்டதையடுத்து அவரது மனுவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது மாநில அரசு.
ஹரியானாவில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவராக இருப்பவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் 2017-ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ள ராம் ரஹீம், ஹரியானாவின் ரோடக் மாவட்டம் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு கடந்த ஜனவரி மாதம், 50 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, நீதிமன்ற அனுமதியின்றி பரோல் வழங்க கூடாது என, ஹரியானா அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 21 நாட்கள் தற்காலிக விடுதலை அளிக்கும்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ராம் ரஹீம் மனு தாக்கல் செய்தார். அவருக்கு 21 நாட்கள் தற்காலிக விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. பரோல் முடிந்த நிலையில் கடந்த செப்.02-ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பினார்.
சிறைக்கு சென்று 27 நாட்களே ஆன நிலையில் மீண்டும் 20 நாள் பரோல் கேட்டு மனு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா சட்டசபைக்கு வரும் அக்.05-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை அக்.08-ம் தேதி நடக்கிறது.
இவரது பரோல் மனுவை ஹரியானா அரசு தேர்தல் நடத்து அலுவலரின் கவனத்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.