ADDED : ஜூன் 15, 2025 09:28 PM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று அதிகாலை மழை பெய்த நிலையில், பகலில் வெயில் வறுத்தெடுத்தது.
டில்லியில் கடும் கோடை நிலவுகிறது. சமீபநாட்களாக வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று அதிகாலை, 2:30 மணி முதல் 4:30 மணி வரை பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது. இதையடுத்து, பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சப்தர்ஜங்கில் 3.35 செ.மீ., லோதி சாலையில் 32 மி.மீ., மழையும், பூசாவில் 2.75 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. பாலம் விமான நிலையத்தில் அதிகாலை 4:30 மணிக்கு 6 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது.
அதேநேரத்தில் நேற்று பகலில் வெயில் வறுத்தெடுத்தது. வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.
அதிகாலையில் சப்தர்ஜங் பகுதியில் சாய்ந்த மொபைல் போன் டவர்
டில்லியின் சப்தர்ஜங் பகுதியில், நேற்று அதிகாலையில் வீசிய பயங்கர காற்றில், 100 அடி உயர மொபைல் கோபுரம் சாய்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, பிளாக் பி-2 என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மொபைல் போன் கோபுரம், பலத்த சத்தத்துடன் உடைந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால், அந்த விபத்தால் யாருக்கும் பாதிப்பில்லை.
அந்த பகுதி அமைந்துள்ள மாளவியாநகர் சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சோம்நாத் பாரதி, அந்த பகுதியை நேற்று பார்வையிட்டார்.
இதுகுறித்து, சோம்நாத் பாரதி வெளியிட்டுள்ள பதிவில், 'சப்தர்ஜங்கில் பி2 என்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர மொபைல் போன் கோபுரம் நேற்று உடைந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால், யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. பகல் நேரமாக இருந்திருந்தால், பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கும்' என கூறியுள்ளார்.