ADDED : பிப் 12, 2025 10:21 PM
விக்ரம்நகர்:பதவியேற்க உள்ள புதிய பா.ஜ., அரசுக்காக டில்லி தலைமைச் செயலகம் தயாராகி வருகிறது. ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர்களின் பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்டு, பிற வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலத்தின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5ம் தேதி நடந்த சட்டசபைத் தேர்தலில் 48 இடங்களை வென்ற பா.ஜ., 26 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. டில்லியின் புதிய முதல்வராக பதவியேற்கும், சட்டசபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் இன்னும் நடைபெறவில்லை.
அரசு ஆவணங்களை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே, தலைமைச் செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
புதிய அரசை வரவேற்க தலைமைச் செயலக வளாகம் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக வழக்கமான பராமரிப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக மூத்த பொது நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முந்தைய அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. புதிய அமைச்சர்களுக்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களும் இப்போதே தயாராகி வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆதிஷி, புதிய அரசு அமைக்கும் வரை பதவியில் தொடருமாறு துணைநிலை கவர்னர் கேட்டுக் கொண்டார்.
அவர் பணியில் இருக்கும்போதே முதல்வரின் அலுவலகத்திற்கு வெளியே இருந்த அவரது பெயர்ப்பலகையும் அகற்றப்பட்டது.
'டில்லி செயலகம் மற்றும் அமைச்சர்களின் முகாம் அலுவலகங்களில் இருந்து எந்த கோப்புகளோ, மின்னணு பதிவுகளோ, ஆவணங்களோ முன் அனுமதியின்றி வெளியே எடுத்துச் செல்லக்கூடாது' என, அனைத்துத் துறைகளுக்கும், டில்லி அரசின் பொது நிர்வாகம், கடந்த வாரமே உத்தரவு பிறப்பித்திருந்தது.
தங்களின் பிரிவு/துறையின் கீழ் உள்ள பதிவுகள், கோப்புகள், ஆவணங்கள், மின்னணு கோப்புகள் போன்றவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கும்படி துறைத் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
தன் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து வார இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி திரும்பிய பிறகு, டில்லியில் பா.ஜ.,வின் புதிய அரசு பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

