முதல் தேர்தலில் எப்போதும் தோல்வி பொம்மை குடும்பத்தின் தொடர்கதை
முதல் தேர்தலில் எப்போதும் தோல்வி பொம்மை குடும்பத்தின் தொடர்கதை
ADDED : நவ 24, 2024 11:09 PM

ஹூப்பள்ளி:கர்நாடகாவில் முதல்வர் பதவியில் இருந்த பொம்மை, பசவராஜ் பொம்மை ஆகியோர் போட்டியிட்ட முதல் தேர்தலில் தோற்றது போல, பரத் பொம்மையும் தோல்வி அடைந்தார்.
கர்நாடக மாநில அரசியலில் தாத்தா, மகன், பேரன் என மூன்று தலைமுறை அரசியல் வரலாற்றை கொண்டதாக பொம்மை குடும்பம் திகழ்கிறது.
தாத்தா
தாத்தா எஸ்.ஆர்.பொம்மை, ஒரு வழக்கறிஞர். முதன் முறையாக 1962ல், குந்த்கோல் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். ஆனால், காங்கிரசில் போட்டியிட்ட டி.கே.காம்பளியிடம் தோற்றார். 1978 - 1985 வரை ஜனதா கட்சி சார்பில் சட்டசபைக்கு போட்டியிட்டு வென்றார். 1988 - 1989 வரை, மாநிலத்தின் முதல்வராக இருந்தார்.
மகன்
இவரது மகன் பசவராஜ் பொம்மை, முதன் முறையாக 1994ல் ஹூப்பள்ளியில் தேர்தலில் நின்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் தோற்றார். இதன் பின், 1998 - 2008 வரை எம்.எல்.சி.,யாக இருந்தார். இதன் பின், ஷிகாவி தொகுதியில் 2008 முதல் 2023 வரை பா.ஜ., சார்பாக, நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அமைச்சர் பதவியிலும் அமர்ந்தார்.
இடையில் 2021 - 2023 வரை கர்நாடகத்தின் 23வது முதல்வராக இருந்தார். 2023ல் ஷிகாவி தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக வென்றார். 2024ல் ஹாவேரி எம்.பி.,யானார். இதனால், தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
பேரன்
ஷிகாவி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல், பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மை களம் இறங்கினார். இவர், எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. தாத்தா, தந்தையின் அரசியல் செல்வாக்கை நம்பி போட்டியிட்டார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் கான் பதானிடம் 13,448 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
ஆக தாத்தா, மகன், பேரன் மூவருமே தாங்கள் போட்டியிட்ட முதல் தேர்தல்களில் தோல்வியடைந்தனர். பொம்மையும், பசவராஜ் பொம்மையும் முதல் தேர்தலில் தோற்றாலும், மாநிலத்தின் முதல்வர் பதவியை அலங்கரித்தனர். அதுபோல், பரத் பொம்மையும், எதிர்காலத்தில் முதல்வராகலாம் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.