ADDED : நவ 15, 2024 02:23 AM

வானுார்:புதுச்சேரி மாநிலம் கொத்தபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் மனைவி மகாலட்சுமி, 62.
கணவரை இழந்த இவர், மகன் சிவக்குமார், 37, என்பவருடன் தமிழக பகுதியான ஆரோவில் அடுத்த நாவற்குளம், செல்வதிருமகள் நகரில் வாடகை வீட்டில் வசிக்கிறார். மளிகை வியாபாரம் செய்து வந்த சிவகுமார், வீட்டில் மளிகை பொருட்களை அடுக்கி வைத்திருந்தார்.
கடந்த 11ம் தேதி, வீட்டில் இருந்த மளிகை பொருட்கள் மின்கசிவு காரணமாக எரிந்து சேதமாகின. இதற்கு தாய்தான் காரணம் எனக் கருதி, மகாலட்சுமியை சிவகுமார் தாக்கினார்.
இதில் தலையில் படுகாயமடைந்த மகாலட்சுமியை, மருத்துவமனையில் சேர்க்காமல், புதுச்சேரி சந்தை புதுக்குப்பத்தில் உள்ள நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, மறுநாள், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கி சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே, மகாலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மருத்துவமனை நிர்வாகம் மூலம் தகவல் அறிந்த ஆரோவில் போலீசார், மகாலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர்.
அப்போது, இடதுபுற தலையில் பலமாக தாக்கியதில், மகாலட்சுமி உயிரிழந்தது உறுதியானது.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சிவகுமாரை நேற்று, கைது செய்தனர்.