ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் மூன்றாவது நாளாக கடும் அமளி
ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் மூன்றாவது நாளாக கடும் அமளி
ADDED : நவ 09, 2024 12:36 AM

ஸ்ரீநகர்: சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில், ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் மூன்றாவது நாளாக நேற்றும் கடும் அமளி ஏற்பட்டது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றியதால் பதற்றம் நிலவியது.
ஜம்மு - காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது.
மத்திய அரசால், 2019 ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கக் கோரி, ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில், கடும் அமளிகளுக்கு இடையே, சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்துக்கு மக்கள் ஜனநாயக கட்சி, அவாமி இத்தேஹாத் கட்சி ஆதரவு தெரிவித்தன. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில், சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கும், மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களுக்கும் நேற்று முன்தினம் கடும் மோதல் ஏற்பட்டதால், சட்டசபை போர்க்களமானது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் சட்டசபை நேற்று வழக்கம் போல் கூடியதும், சபையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முழக்கமிட்டனர். அப்போது, அவர்களுக்கும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறப்பு அந்தஸ்தை திரும்பத் தரக்கோரி, மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் பேனரை பிடித்தபடி நின்றார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், 'பாரத் மாதா கி ஜே' என கோஷமிட்டனர்.
சபையில் கூச்சல், குழப்பம் நிலவியதால், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றும்படி சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.