ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவித்தது அமெரிக்கா!
ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவித்தது அமெரிக்கா!
UPDATED : ஜன 18, 2024 04:33 PM
ADDED : ஜன 18, 2024 01:46 PM

வாஷிங்டன்: செங்கடல் சர்வதேச வணிகப் பாதையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு காரணமாக இருப்பதாக ஏமனின் ஹவுதி படையை சர்வதேச பயங்கரவாத குழுவாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. மற்றொரு மேற்காசிய நாடான ஏமனில் இருந்து இயங்கும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்தது.
இதன் ஒரு பகுதியாக, செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதியின் தாக்குதல்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், செங்கடல் வழியாக செல்வதற்கு சரக்கு கப்பல்கள் தயக்கம் காட்டுவதால், சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செங்கடல் சர்வதேச வணிகப் பாதையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு காரணமாக இருப்பதாக ஏமனின் ஹவுதி படையை சர்வதேச பயங்கரவாத குழுவாக அமெரிக்கா அறிவித்துள்ளது. '' இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும், பயங்கரவாத குழு என்ற அறிவிப்பு தங்களின் நிலைப்பாட்டை மாற்றாது என்றும் ஹவுதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் சிக்கிய கப்பல் மீட்பு
ஏடன் வளைகுடாவில் மார்ஷல் தீவு கொடியுடன் இருந்த வணிகக் கப்பலில் இருந்து வந்த அவசர அழைப்புக்கு பதிலளித்த ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் போர்க் கப்பல், அந்த வணிகக் கப்பலை மீட்டது. பாதிக்கப்பட்ட கப்பல் அடையாளம் தெரியாதவர்களால் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.