ஓ.டி.டி.,யில் குடும்பத்துடன் திரைப்படம் தள்ளாடும் கன்னட திரை உலகம்
ஓ.டி.டி.,யில் குடும்பத்துடன் திரைப்படம் தள்ளாடும் கன்னட திரை உலகம்
ADDED : பிப் 28, 2024 06:00 AM
பெங்களூரு : ஓ.டி.டி.,யில் குடும்பத்துடன் அமர்ந்து, வீட்டில் இருந்தபடியே மக்கள் திரைப்படம் பார்ப்பதால், சினிமா தியேட்டர்களுக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் புதிய திரைப்படங்களை எடுக்க, கன்னட தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
சினிமா தியேட்டர்களுக்கு சென்று, படம் பார்ப்பதில் உள்ள மவுசு, 1990ல் பிறந்தவர்களிடம் கேட்டால் தெரியும். ஆனால், இன்று சமூக வலைத்தள வளர்ச்சியால், தியேட்டர்களுக்கு சென்று, யாரும் திரைப்படங்கள் பார்க்க விரும்புவது இல்லை.
மொபைல் போன்கள்
புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியான அன்றே, அதை 'டவுன்லோட்' செய்து, மொபைல் போன்களில் பார்த்து விடுகின்றனர். இதுதவிர ஓ.டி.டி.,யில் பணம் கட்டியும், வீட்டில் இருந்தபடியே புதிய திரைப்படங்களை பார்த்து வருகின்றனர்.
இதுதவிர புதிய திரைப்படங்களில் இடம் பெறும், காட்சிகளை 30 நொடி வீடியோவாக தயாரித்து, 'ரீல்ஸ்' வீடியோவாக வெளியிடுகின்றனர். இதனால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் மோகம், மக்களிடம் நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. இதனால் கன்னட திரை உலகம் பிரச்னையை சந்தித்து வருகிறது.
கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக தியேட்டர்களுக்குச் சென்று, மக்கள் திரைப்படம் பார்ப்பது கர்நாடகாவில் வெகுவாக குறைந்து உள்ளது. ஒரு ஆண்டிற்கு 200 திரைப்படங்கள் வெளியானால், அதில் ஒன்று, இரண்டு படங்கள் மட்டுமே 'ஹிட்' ஆகிறது. மற்ற அனைத்து படங்களும் 'பிளாப்' ஆகின்றன.
தயக்கம்
இதனால் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து படம் எடுக்க, தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதே, மக்கள் வராததற்கு முக்கிய காரணமாக உள்ளது. சினிமா தியேட்டரில் ஒருவர், தனது மனைவி, இரு குழந்தைகளுடன் படம் பார்க்க சென்றால், டிக்கெட், தின்பண்ட செலவு என குறைந்தது 5,000 ரூபாய் ஆகிறது. இதுவே சினிமா தியேட்டருக்கு போகாமல், ஓ.டி.டி.,யில் பணம் கட்டி, டி.வி., அல்லது மொபைலில் அந்த சினிமாவை பார்த்தால் செலவு மிச்சம் ஆகிறது. இதனால் யாரும் சினிமா தியேட்டர் பக்கம் செல்வதை விரும்பவில்லை.
சமூக வலைத்தளம்
முன்பு எல்லாம் தியேட்டரில் என்ன திரைப்படம் வருகிறது என்பதை, பத்திரிகைகள் மூலம் தான் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது சமூக வலைத்தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
கன்னட திரை உலகில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இடையிலும், நிறைய பிரச்னை நிலவுகிறது. இந்த பிரச்னையை தீர்க்க முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும், ஆர்வம் காட்டுவதே இல்லை.
இந்த நிலை நீடித்தால், கன்னட சினிமா துறையில் சறுக்கல் ஏற்படும் என்பது பலரது மனகுமுறலாக உள்ளது.

