வளர்மதி மீதான வழக்குக்கு தடை இல்லை சொத்து குவிப்பு ------------
வளர்மதி மீதான வழக்குக்கு தடை இல்லை சொத்து குவிப்பு ------------
ADDED : ஜன 31, 2024 12:48 AM

புதுடில்லி, தமிழகத்தில் கடந்த 2001 - 06 வரையிலான அ.தி.மு.க., ஆட்சி யில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் வளர்மதி, 66.அப்போது, அவரும், அவரது குடும்பத்தினரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில், வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து, 2012ல் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் வளர்மதியின் வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு செப்., 9ல் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.
வழக்கு குறித்து வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்கவும், 2023, டிச., 4 முதல் வாதங்களை துவங்கவும், வளர்மதி தரப்புக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி வளர்மதி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வளர்மதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது:
முடித்து வைக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது ஏற்புடையதல்ல.
வேறு அமர்வில் உள்ள வழக்கோடு இதை தொடர்புபடுத்தி விசாரிக்க வேண்டாம்.
தீர்ப்பு வழங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன பின் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.வழக்கை மறு விசாரணைக்கு எடுத்ததே தவறு என்ற கோணத்தில் அணுகுகிறோம். இவ்வாறு அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இதேபோன்ற வேறொரு வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை அறிக்கையாக அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த மனு மீதான விசாரணை பிப்., 6க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
அடுத்த விசாரணை வரும் வரை சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.---