'பார்லிமென்டை விட உயர்ந்த அமைப்பு எதுவும் கிடையாது'
'பார்லிமென்டை விட உயர்ந்த அமைப்பு எதுவும் கிடையாது'
ADDED : ஏப் 23, 2025 03:54 AM

புதுடில்லி : மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மீண்டும் தன் தாக்குதலை தொடர்ந்துள்ளார்.
''பார்லிமென்டைவிட உயர்ந்த அமைப்பு கிடையாது. அதன் உறுப்பினர்களாக உள்ள, எம்.பி.,க்கள் தான், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் எஜமானர்கள்,'' என, அவர் கூறியுள்ளார்.
நடவடிக்கை
மசோதாக்களுக்கு அனுமதி வழங்குவதில் கவர்னர் தாமதம் செய்வதாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு விதித்தது.
மேலும், கவர்னர்கள் அனுப்பும் மனுக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், உச்ச நீதிமன்றம் தன் வரம்பை மீறியுள்ளதாக கூறினார்.
மேலும், ஜனாதிபதிக்கு உத்தரவிட முடியாது என்றும், ஜனநாயக அமைப்புகள் மீது உச்ச நீதிமன்றம் அணு ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது என்றும் கடுமையுடன் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.பி.,க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோரும், உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், டில்லி பல்கலையின் சட்ட மையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து நான் கூறியதற்கு சிலர் விமர்சித்துள்ளனர். அரசியலமைப்புச் சட்ட பதவியில் உள்ள நான் பேசியது அனைத்தும் நாட்டின் நலனுக்காகவே.
அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை, அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதி அல்ல என்று கூறியது உச்ச நீதிமன்றம். அதே உச்ச நீதிமன்றம், அதற்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது.
நாட்டின் ஜனநாயகத்தின் இருண்ட பக்கங்களாக கருதப்படும் எமர்ஜென்சி, 1975ல் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், மக்களுக்கான அடிப்படை உரிமைகளை முடக்கி உத்தரவிடப்பட்டது. அடிப்படை உரிமைகளை மறுக்கக் கூடாது என, ஒன்பது உயர் நீதிமன்றங்கள் கூறின.
இதை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றம், 4:1 என்ற பெரும்பான்மை உத்தரவில், அடிப்படை உரிமைகளை மறுக்கலாம் என்று கூறியது.
அப்போது, எதிர்ப்பு உத்தரவு பிறப்பித்தவர் நீதிபதி எச்.ஆர். கன்னா. இவர் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் உறவினர்.
அவ்வாறு அரசுக்கு எதிரான உத்தரவு பிறப்பித்ததால், தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு அவருக்கு அப்போது மறுக்கப்பட்டது.
அதன்பின், ஒன்பது நீதிபதிகள் அமர்வு, அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது என்று உத்தரவிட்டது.
இவ்வாறு மாறுபட்ட உத்தரவுகள் வழங்கினாலும், அரசியலமைப்புச் சட்டம் குறித்து எந்த சந்தேகமும் எழுப்பப்படவில்லை. இதில் இருந்து அரசியலமைப்புச் சட்டம்தான் மிகவும் உயர்ந்தது.
தோல்வி
அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்துள்ள பார்லிமென்டைவிட உயர்ந்த அமைப்பு இருக்க முடியாது. அதன் உறுப்பினர்களாக உள்ள, எம்.பி.,க்கள் தான், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் எஜமானர்கள்.
எமர்ஜென்சியை அறிவித்த, காங்கிரசைச் சேர்ந்த அப்போதைய பிரதமர் இந்திரா, 1977ல் தேர்தலில் தோல்வி அடைந்தார். இதில் இருந்து, அரசியலமைப்புச் சட்டம் என்பது மக்களுக்கானது என்பது ஊர்ஜிதமாகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,க் கள் அடங்கிய பார்லிமென்ட், அதன் பாதுகாவலனாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.