அதெல்லாம் எந்த விதி மீறலும் கிடையாது: தனுஷ் நோட்டீஸ்க்கு நயன்தாரா பதில்
அதெல்லாம் எந்த விதி மீறலும் கிடையாது: தனுஷ் நோட்டீஸ்க்கு நயன்தாரா பதில்
UPDATED : நவ 29, 2024 08:47 PM
ADDED : நவ 29, 2024 08:27 AM

சென்னை: நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. நாங்கள் விதி மீறலில் ஈடுபடவில்லை என நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, மும்பையை சேர்ந்த 'நெட்பிலிக்ஸ்' நிறுவனம் வெளியிட்டது. இதில், நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, நயன்தாராவுக்கு, நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு நயன்தாரா அளித்த பதிலில், தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், மும்பையை சேர்ந்த, நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, தனுஷ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் 'படத்தில் நயன்தாராவின் நடிப்பு, குரல், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது.
தற்போது, நெட்பிலிக்ஸ் நிறுவனம், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ காட்சிகள் உடன், நயன்தாரா திருமண வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. இதனால், எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இழப்பீடாக, 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கு, நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இது குறித்து, நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழக்கறிஞர் அளித்த பதில்: நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. நாங்கள் விதி மீறலில் ஈடுபடவில்லை. பதிப்புரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை. இதில் தனிப்பட்ட காட்சிகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. இது ஒரு மீறல் அல்ல. இவ்வாறு அவர் கூறினார். தனுஷ் தொடர்ந்து வழக்கு டிசம்பர் 2ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.