'அரசியல் உறுதி இருந்தது; கட்டுப்பாடுகள் இல்லை': ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கான விளக்கமளித்த விமானபடை தளபதி
'அரசியல் உறுதி இருந்தது; கட்டுப்பாடுகள் இல்லை': ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கான விளக்கமளித்த விமானபடை தளபதி
ADDED : ஆக 09, 2025 06:16 PM

பெங்களூரு:'' மத்திய அரசின் தெளிவான அரசியல் உறுதிப்பாடு காரணமாக 'ஆப்பரேஷன் சிந்தூர்' வெற்றி பெற்றது. இந்திய விமானப்படைக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை,'' என விமானப்படை தளபதி ஏபிசிங் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட 'ஆப்பரேஷன் சிந்தூர்' குறித்து லோக்சபாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், போர் விமானிகளின் கைகளை கட்டிப் போட்டு விட்டீர்கள். முழு சுதந்திரம் கொடுக்கவில்லை.இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், முதலில் 100 சதவீதம் அரசியல் உறுதி இருக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், நிருபர்களைச் சந்தித்த விமானப்படை தளபதி ஏபி சிங் கூறியதாவது: '' ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெறுவதற்கு, அரசியல் உறுதி இருந்தது முக்கிய காரணம். தெளிவான அரசியல் உறுதி இருந்ததுடன், தெளிவான உத்தரவும் வழங்கப்பட்டது. எங்கள் மீது எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. ஏதாவது கட்டுப்பாடுகள் இருந்தால், அதனை நாங்களே போட்டுக் கொண்டதுதான். போருக்கான விதிகள் குறித்து ஆயுதப்படைகளே முடிவு செய்தன. பதற்றத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து நாங்களே முடிவு செய்தோம். திட்டமிடவும், அதனை அமல்படுத்தவும் முழு சுதந்திரம் இருந்தது.
முப்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இருந்தது. முப்படை தலைமை தளபதி பதவி உண்மையான மாற்றத்தை பிரதிபலித்தது. எங்களை ஒருங்கிணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். அனைத்து அமைப்புகளின் உதவியை பெறுவதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முக்கிய பங்காற்றினார். இவ்வாறு அவர் கூறினார்.

