சொல்கிறார்கள் ––––––––––– 4 ஏக்கர் இயற்கை விவசாயத்தில் ஓராண்டு லாபம் ரூ.10 லட்சம் –––––––––––
சொல்கிறார்கள் ––––––––––– 4 ஏக்கர் இயற்கை விவசாயத்தில் ஓராண்டு லாபம் ரூ.10 லட்சம் –––––––––––
ADDED : ஆக 18, 2026 11:40 AM
இயற்கை முறையில் பப்பாளி மற்றும் நேந்திரன் வாழைக்காய்களை சாகுபடி செய்து, நிறைவான லாபம் ஈட்டும், துாத்துக்குடி மாவட்டம், சக்கம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த, 49 வயதாகும் சரவணன்:
எங்கள் குடும்பத் தொழில் விவசாயம்; சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. ஆரம்பத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தேன். பல காரணங்களால் அடுத்தடுத்து நஷ்டமாகி, விவசாயத்தை விட்டுவிடலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன்.
அப்போது நண்பர் ஒருவர், ‘இயற்கை விவசாயம் வாயிலாக நல்ல லாபம் ஈட்டலாம்’ என்று கூறி, அவரின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று காண்பித்தார். அங்கிருந்த பப்பாளி மரங்கள் மிகவும் செழிப்பாக இருந்ததுடன், பழங்களும் காய்த்து குலுங்கின.
‘பப்பாளி சாகுபடிக்கு ரசாயன உரமே தேவையில்லை; பராமரிப்பும் குறைவு; ஒருமுறை பயிரிட்டால், பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து வருமானம் பார்க்கலாம்’ என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறி உற்சாகப்படுத்தியதோடு, இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறையையும் நண்பரே சொல்லிக் கொடுத்தார்.
ஆரம்பத்தில் சோதனை முயற்சியாக, 50 சென்ட் பரப்பில், ‘ரெட் லேடி’ ரக பப்பாளிகளை நடவு செய்தேன். எதிர்பார்த்ததை விட நல்ல மகசூலும், லாபகரமான விலையும் கிடைத்தது. கடந்த, 10 ஆண்டுகளாக 4 ஏக்கரிலும் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.
இப்போது, 1 ஏக்கரில், ‘ஜி – 15’ ரக பப்பாளியும், 1 ஏக்கரில் தேனி நேந்திரன் ரக வாழைகளும் அறுவடையில் இருக்கின்றன. மீதி 2 ஏக்கரில் சாம்பார் வெள்ளரி, நெல்லிக்காய் சாகுபடிக்காக நிலத்தை தயார் செய்து வைத்திருக்கிறேன்.
நேந்திரன் வாழைக்காய்களை கேரள வியாபாரிகளும், பப்பாளி பழங்களை நம்மூர் வியாபாரிகளும் மொத்தமாக வாங்கி கொள்கின்றனர். சில நேரங்களில் சந்தைக்கும் எடுத்து சென்று விற்பனை செய்து விடுவேன். இயற்கை முறையில் விளைவிப்பதால் பழங்கள் தரமானதாகவும், சுவையாகவும் இருக்கின்றன.
சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் நேரடியாக என் தோட்டத்திற்கே வந்து கேட்பர். அவர்களுக்கு சந்தை விலையில் விற்பனை செய்கிறேன். நஞ்சில்லாத பழங்களை உற்பத்தி செய்து கொடுப்பதில் சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கிறது.
கடந்தாண்டு, 800 பப்பாளி மரங்களில் கிடைத்த பழங்கள் விற்பனையில், 5 லட்சத்து 13,500 ரூபாய் லாபம் கிடைத்தது. 1,000 தேனி நேந்திரன் வாழைக்கன்றுகள் வாயிலாக, 5 லட்சத்து 26,500 ரூபாய் லாபமாக கிடைத்தது.
ஆக மொத்தம், கடந்தாண்டு பப்பாளி மற்றும் நேந்திரன் விற்பனையில், 10 லட்சத்து 40,000 ரூபாய் லாபம் கிடைத்தது.
தொடர்புக்கு: 94422 64327
***
