சொல்கிறார்கள் –––––––––––––– ‘பிரெஷ்’ மீன்கள் விற்பனையில் மாதம் ரூ.40,000 லாபம்!’ ––––––––––––––
சொல்கிறார்கள் –––––––––––––– ‘பிரெஷ்’ மீன்கள் விற்பனையில் மாதம் ரூ.40,000 லாபம்!’ ––––––––––––––
ADDED : செப் 16, 2026 11:31 AM
புதிதாக பிடிக்கப்பட்ட, பதப்படுத்தப்படாத மீன்களை ‘ஆன்லைன்’ வாயிலாக விற்பனை செய்யும், புதுக்கோட்டையைச் சேர்ந்த 30 வயதாகும் ராஜ்குமார்:
தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு துறையில், ‘டிப்ளமா’ முடித்து, சென்னையில் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தேன். என்னுடன் படித்த பலரும் வெளிநாட்டு வேலைக்கு சென்றனர். எனக்கு, குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ விருப்பமில்லை. அதனால், வேலையை விட்டு, சொந்த ஊருக்கே திரும்பினேன்.
நம்மூர் கடல் வளத்தை கொண்டு ஏதாவது தொழில் செய்யலாம் என்று முடிவு செய்தேன். எங்கள் பகுதியில், புதிதாக பிடிக்கப்பட்ட ‘பிரெஷ்’ மீன்கள் கிடைப்பது அரிது. பெரும்பாலும், வெளியூரில் இருந்து வரும், ‘ஐஸ்’ வைத்து பதப்படுத்தப்பட்ட மீன்கள் தான் விற்பனை செய்யப்படுகின்றன.
அதிகாலையில் நாட்டுப்படகில் சென்று பிடிக்கும் மீன்களை அன்றே விற்பனை செய்வதற்காக, ‘முத்துக்குடா சீ புட்’ என்ற, ‘ஆன்லைன்’ நிறுவனத்தை தொடங்கினேன்.
தொழில் துவங்கி முதல் ஆறு மாதங்கள், ‘வாட்ஸாப்’ வாயிலாகவே, ‘ஆர்டர்’கள் பெற்றேன். என் முதல் வாடிக்கையாளர், காரைக்குடியைச் சேர்ந்தவர். முதன் முறையாக இறால் அனுப்பினோம். சாப்பிட்ட பின், ‘இவ்வளவு தரமான இறாலை இங்கு வாங்கியதே இல்லை’ என்று அவர் கூறியது தான், அடுத்தடுத்த ஆர்டர்களுக்கு காரணமாக அமைந்தது.
வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்த பின், கொள்முதல் செய்வது தான் எங்களுடைய நடைமுறை. முந்தைய நாளே ஆர்டர் வந்தால், மறுநாள் அதிகாலை கடற்கரையில் மீன்களை வாங்கிய சில மணி நேரங்களில், வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்த்து விடுவோம். ஒரே நாளில் கடலுக்கு சென்று திரும்பும் நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்களை மட்டுமே வாங்கி விற்பனை செய்கிறோம்.
தற்போது, புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி பகுதிகளில் நிரந்தர வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். மதுரை, திருச்சி, தஞ்சையில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. லாபம் குறைந்தாலும், தரத்தில் சமரசம் செய்வதில்லை. தற்போது வினியோகம் செய்வதற்காக மூன்று பேரை பணிக்கு அமர்த்தியுள்ளேன். இனி தொழிலை விரிவுபடுத்தி, கூடுதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
மீன்பிடி தடை காலம் தவிர, தினசரி 20 ஆயிரம் ரூபாய் வரை வியாபாரம் நடக்கிறது. தற்போது அனைத்து செலவுகளும் போக, மாதம் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் வருகிறது. கார்ப்பரேட் வேலையை ஒப்பிடும்போது வருமானம் குறைவாக இருக்கலாம். ஆனால், இன்று எனக்கென ஒரு நிறுவனமும், அடையாளமும் உருவாகி இருக்கிறது. இது ஆரம்பம் தான்; எதிர்காலத்தில் இன்னும் பெரிய அளவில் வளர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
