ADDED : செப் 02, 2026 10:50 AM
––––––––––––
‘கல்வி தான்
நம்முடைய
அழியாத
சொத்து!’
–––––––––––
புதுச்சேரி அருகே பொம்மையார்பாளையம் சாலையோரம், இளநீர் விற்பனை செய்து வரும், பழனிவேல்:
விழுப்புரம் மாவட்டம், குயிலாப்பாளையம் தான் என் சொந்த ஊர். 5 வயது வரை மற்ற குழந்தைகள் போல் ஓடி விளையாடி, நண்பர்களுடன் துள்ளி குதித்து, சந்தோஷமாக இருந்தேன். திடீரென வந்த போலியோ எல்லாவற்றையும் மாற்றியது. பள்ளி செல்ல முடியவில்லை.
இப்போது இருக்கும் மருத்துவ வசதிகளும் அந்த காலத்தில் இல்லை. தினசரி வாழ்க்கையே பிரச்னை என்பதால், படிப்பு கனவாகவே போய் விட்டது.
உடல் குறைபாடும், வறுமையும் சேர்ந்து என்னை அளவுக்கு அதிகமாகவே சோதித்தன. ஆரம்ப காலத்தில், ‘யாராவது வந்து உதவினால் நன்றாக இருக்குமே’ என்று நினைத்தேன். ‘அவசரமான இந்த உலகில், அவரவர் வேலையை பார்ப்பதற்கே நேரமும், பணமும் போதவில்லை. அப்புறம் எப்படி நம்மை மாதிரி இருப்போருக்கு உதவி செய்வர்’ என்பது, மிகவும் காலதாமதமாக புரிந்தது; அப்போது என் வயது, 25.
சொந்த முயற்சியில் நடமாடும் பஞ்சர் கடை ஆரம்பித்தேன்; ஆனாலும், பெரிதாக வருமானம் இல்லை. சில நாட்கள் வருமானமே இருக்காது. இருந்தாலும், விடாமுயற்சியுடன் இருந்தேன். என்றுமே தொழிலை விட்டுவிட வேண்டும் என்று நினைத்ததில்லை.
நம்பிக்கையுடன் உழைத்தால் கண்டிப்பாக ஒருநாள் வாழ்க்கை மாறும் என்றே ஒவ்வொரு நாளையும் நகர்த்தினேன். அந்த சமயத்தில் திருமணமாகி, குழந்தையும் பிறந்ததால் தேவைகள் அதிகமாகின.
வேறு என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்து, நான் ஓட்டிய மூன்று சக்கர வண்டியிலேயே இளநீர் கடையை ஆரம்பித்தேன். பொம்மையார்பாளையம் ஊருக்கு வந்த பின் நன்கு வியாபாரம் ஆனது; நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். ‘இளநீர் சுவையாகவும், விலை நியாயமாகவும் இருக்கும்’ என்று மக்கள் என்னை தேடி வர ஆரம்பித்தனர்.
மேலும், நான் அன்பாக பேசி பழகுவதை பார்த்து, பலரும் நிரந்தர வாடிக்கையாளர்களாகினர். ஆயினும், படிக்க முடியவில்லையே என்ற வருத்தமும், ஏக்கமும் இன்னும் இருக்கிறது. அதனால் தான், என் மகனை நன்கு படிக்க வைக்கிறேன். நிறைய படித்து பெரிய மனிதனாகி, பலருக்கும் உதவி செய்ய வேண்டும். அதற்காகத் தான் சிரமப்பட்டு உழைக்கிறேன்.
ஒரு அப்பாவாக என் மகனுக்கு கொடுக்கும் சொத்து, படிப்பு மட்டுமே. அதை வைத்து அவன் முன்னேற வேண்டும். ‘நம்மிடம் உள்ள எல்லா சொத்தையும் திருடி விடலாம்; ஆனால், படிப்பை எவராலும் திருட முடியாது’ என்று, திரைப்படம் ஒன்றில் வசனம் வரும்; அது தான் உண்மை!
