ADDED : செப் 18, 2026 06:51 AM
சொல்கிறார்கள்/ 19/09/26 சனிக்கிழமை இதழ்
-––––––––
நாணயம் விகடன், ஆகஸ்ட் 23, 2026, பக்: 42
––––––––––
‘நம் திறமையை
அடையாளம் கண்டு
தொழிலாக மாற்றலாம்!’
––––––––––
தையல், ‘எம்பிராய்டரி’ தொழிலில் மாதம் 4 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும், சென்னையைச் சேர்ந்த பாக்கியலட்சுமி:
சிறு வயதில் பாட்டியிடம் தான் தையல், ‘எம்பிராய்டரி’யை ஆர்வமுடன் கற்றுக் கொண்டேன். அதுவே, என் வாழ்க்கையின் அடையாளமாக மாறும் என்று அப்போது தெரியாது. கணவரிடம் கலந்தாலோசித்து, 2007ல் வெறும் 80 சதுர அடி பரப்பளவில், ‘பாக்யஸ்ரீ டிசைன்ஸ்’ என்ற பெயரில் தொழில் துவங்கினேன். அப்போதைய என் முதல் வருமானம், 150 ரூபாய்; இன்று மாதம், 4 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.
தொழில் ஆரம்பித்ததுமே, ‘ஆர்டர்’கள் குவிந்து விடவில்லை. தினசரி 20 கி.மீ., வரை வெவ்வேறு இடங்களுக்கு சைக்கிளில் சென்று, கடை கடையாக ஏறி இறங்கினேன். ஒரு கட்டத்தில் ஒரு கடைக்காரர் முதன்முதலாக எனக்கு வாய்ப்பளித்தார்.
அது, ‘முயற்சி வீண் போகாது’ என்ற நம்பிக்கையை கொடுத்தது. அந்த முதல் ஆர்டர், எனக்கு வெறும் வருமானம் மட்டும் இல்லை; என்னை நிரூபித்து கொள்வதற்கான முதல் வாய்ப்பாகவே இருந்தது. என் வேலைப்பாடுகள் வாடிக்கையாளருக்கு திருப்தியளித்ததால், அடுத்தடுத்த ஆர்டர்களை பெற்றுக் கொடுத்தது. படிப்படியாக, மொத்த ஆர்டர்களை பெறும் அளவுக்கு என் வியாபாரம் வளர்ந்தது. சுபநிகழ்ச்சிகள் முதல் பள்ளி சீருடைகள் வரை, ஆர்டர்கள் எடுத்து செய்தேன்.
தொழிலை வளர்ப்பதற்காக வங்கியில் கடன் பெற்றேன். அதேபோல் காலத்திற்கேற்ப, செயற்கை நுண்ணறிவு எனப்படும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தையும் என் வியாபாரத்தில் பயன்படுத்தினேன்.
சமூக வலைதளங்களில் காணப்படும் புதிய வடிவமைப்புகளை மாடலாக எடுத்து, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேக டிசைன்களை உருவாக்கி தந்தேன்.
வாடிக்கையாளர்கள் அடுத்த தலைமுறையினரை நம்மிடம் அழைத்து வரும்போது, வருமானத்தை தாண்டி நம் வணிகத்தின் நம்பிக்கைக்கு கிடைக்கும் அங்கீகாரமாக அதை பார்க்கிறேன். என்னிடம் பணியாற்றும் ஊழியர்களை, தொழில் பங்குதாரர்களாகவே நடத்துகிறேன்.
வாடிக்கையாளர், நாங்கள் தைத்து கொடுக்கும் ஆடையை அணியும்போது, மகிழ்ச்சியுடன் உணர்கிறாரா என்பதில் தான் வெற்றி இருக்கிறது; லாபம் குறைந்தாலும், தரத்தில் எப்போதும் சமரசம் செய்து கொள்வது இல்லை.
ஆர்வமுள்ள பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் தையல் மற்றும் எம்பிராய்டரி கற்று தந்து, அவர்கள் சொந்தக் காலில் நிற்கவும், நிதி சுதந்திரம் பெறவும் வழிகாட்டுகிறேன்.
நம்மிடம் இருக்கும் திறமையை அடையாளம் கண்டு, அதை தொழிலாக மாற்றினால், அதன் மூலம் நமக்கான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முடியும்; நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் வளர்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்கித் தர முடியும்.
***
