ADDED : அக் 18, 2024 07:46 AM

குடகு: கர்நாடகா, தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக காவிரி ஆறு உள்ளது. இந்த ஆறு குடகின் பாகமண்டலா தலைகாவிரியில் உற்பத்தி ஆகிறது.
காவிரி தாய்க்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தலைகாவிரியில் காவிரி தீர்த்த உற்சவம், கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று காலை 7:40 மணிக்கு தீர்த்த உற்சவம் துவங்கியது.
காவிரி தாய் சிலை அமைந்து உள்ள இடத்தில் இருந்து, தண்ணீர் பொங்கி எழுந்தது.
இதனை பார்த்து பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். பின், காவிரி தாய்க்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்தனர். தீர்த்த தண்ணீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
பூஜை முடிந்த பின், குடங்கள், பாத்திரங்களில் தீர்த்த தண்ணீரை பக்தர்கள் பிடித்து, வீடுகளுக்கு எடுத்து சென்றனர். பக்தர்கள் கொடவா சமூக முறைப்படி உடை அணிந்து இருந்தனர். தீர்த்த உற்சவத்திற்காக மைசூரு, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.