ADDED : மார் 01, 2024 06:33 AM

பெங்களூரு: மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் பெருமையை போற்றும் விதமாக, பெங்களூரு நகரில் முதல் முறையாக, மார்ச் 3ல் ஒரு நாள் கருத்தரங்கம் நடக்கிறது.
சைவ இலக்கியங்களான பன்னிரு திருமுறைகளில், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், எட்டாம் திருமுறை எனப் போற்றப்படுகிறது. 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பது சான்றோர் வாக்கு.
இத்தகைய திருவாசகம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் மார்ச் 3ம் தேதி, பெங்களூரு, இந்திரா நகரின் 8வது முக்கிய சாலையில் உள்ள சங்கீத சபா, புரந்திர புவன் அரங்கத்தில் நடக்க உள்ளது. காலை 8:00 முதல், மாலை 6:30 மணி வரை நடக்கும்.
சமய சொற்பொழிவாளர்கள், ஓதுவார்கள் மற்றும் சிறுவர் - சிறுமியர் திருவாசகத்தின் பெருமையை இயல், இசை, நாட்டியம் என முத்தமிழ் விருந்தாக வழங்க உள்ளனர்.
மதுரை பேராசிரியர் மீனாட்சி சுந்தரம், சென்னை முனைவர் அருணை, பாலறாவாயன், கோவை பேராசிரியர் சிவ. சண்முகம், திருவையாறு சாம்பவஸ்ரீ ரமணன் ஆகியோர் திருவாசகத்தில் பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர்.
திருத்தணி சுவாமிநாதன், திருமறைக்காடு சிவகுமார், மதுரை பொன்.முத்துக்குமரன், இரா.குமரகுருபரன் ஆகியோர் தத்தம் குழுவினருடன் திருவாசக இசை நிகழ்ச்சி வழங்க உள்ளனர்.
தென்காசி திருவள்ளுவர் கழக துணை தலைவர் கடையம் கல்யாணி சிவகாமி நாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்குகிறார். பெங்களூரு சிறார்கள், திருவாசகத்துக்கு பரத நாட்டியம் மூலம் விளக்க உள்ளனர்.
பெங்களூரு நகரில் பல்வேறு ஆன்மிக மற்றும் தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்திவரும், ஆண்ட அரசு உழவாரத் திருப்பணி குழு, மரகதக்கூத்தன் அறக்கட்டளை, பெங்களூரு தமிழ் இலக்கியப்பேரவை அமைப்புகள் இணைந்து திருவாசக கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
கூடுதல் தகவல்களுக்கு, 99013 76541 / 98452 21921 / 99725 35455 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

