விரட்டுங்கள் குரங்கு அம்மையை: என்னவெல்லாம் செய்யணும் தெரியுமா?
விரட்டுங்கள் குரங்கு அம்மையை: என்னவெல்லாம் செய்யணும் தெரியுமா?
ADDED : செப் 03, 2024 11:50 AM

புதுடில்லி: 'குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கவும் வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இந்த நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது.
தற்போது, உலக நாடுகளில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வருவதாக கூறி, சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை 2 வாரம் முன், உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போது தான் மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் செய்து வருகின்றன.
வழிகாட்டு நெறிமுறைகள்!
* குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
* மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு உடையை அணிந்து பணியாற்ற வேண்டும்.
* குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் 21 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி ஏற்பட்டால் 104 என்ற எண்ணுக்கு தொடர் கொள்ளலாம்.
* பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்குச் சென்று சோதனை செய்து சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* இது வைரஸ் தொற்று என்பதால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக துவங்க வேண்டும்.
* இத்தகைய அறிகுறியுடன் வரக் கூடியவர்களை தனியார் மருத்துவமனைகளும் கண்காணித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 32 ஆய்வகங்களில் குரங்கு அம்மை தொற்று பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் இருந்து தற்போது வரை, 116 நாடுகளில் 99,176 பேர் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 208 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.