டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு; விசாரணையில் அம்பலம்
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு; விசாரணையில் அம்பலம்
UPDATED : நவ 13, 2025 12:07 PM
ADDED : நவ 13, 2025 11:39 AM

புதுடில்லி: டில்லியில் கார் குண்டு வெடிப்பு நிகழ்த்த, கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் ரூ.20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது விசாரணையில் அம்பலமானது.
டில்லியில் நவ.,10ம் தேதி செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளான டாக்டர் முசம்மில், டாக்டர் அதீல் மற்றும் டாக்டர் ஷாஹீன் ஆகியோர் கூட்டாக, 20 லட்சம் ரூபாய் ரொக்கமாக திரட்டி, அதை உமரிடம் ஒப்படைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்தக் குழு குருகிராம், நுஹ் மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 20 குவிண்டால்களுக்கு உரத்தை வாங்கி இருக்கிறது.உமருக்கும் டாக்டர் முசம்மிலுக்கும் இடையே பணத் தகராறு ஏற்பட்டு உள்ளது.
கூடுதலாக, உமர் சிக்னல் செயலியில் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 2-4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியது விசாரணையில் தெரிய வந்தது.இதற்கிடையே டில்லியில் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் எட்டு பேர் தலா இரண்டு பேராக, சென்று 4 இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டு இருந்தது என்ஐஏ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
டில்லி குண்டு வெ டிப்பு தொடர்பாக, கான்பூரை சேர்ந்த முகமது ஆரிப் என்ற மருத்துவ மாணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தை சேர்ந்த முதலாமாண்டு இருதய சிக்கிச்சை பிரிவு மாணவரான இவர், நேற்று மாலை போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இவர் கடந்த 3 மாதங்களாக இங்கு படித்து வருகிறார். வெளியில் தங்கி, தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

