மூன்று குப்பை கிடங்குகளை 24 மணி நேரமும் செயல்பட உத்தரவு
மூன்று குப்பை கிடங்குகளை 24 மணி நேரமும் செயல்பட உத்தரவு
ADDED : ஏப் 24, 2025 11:16 PM
விக்ரம்நகர்:காஜிப்பூர், பால்ஸ்வா, ஓக்லா ஆகிய மூன்று குப்பைக் கிடங்குகளில் இருந்து கழிவுகளை அகற்றும் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த முதல்வர் ரேகா குப்தா, இந்த கிடங்குகளை 24 மணி நேரமும் செயல்படுத்தும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நகரின் குப்பை அகற்றும் பணி, குப்பை மேலாண்மை குறித்து முதல்வர் ரேகா குப்தா நேற்று முன்தினம் மாநில தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது காஜிப்பூர், பால்ஸ்வா, ஓக்லா ஆகிய மூன்று குப்பைக் கிடங்குகளின் செயல்பாடு குறித்து முதல்வர் ரேகா குப்தா அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அவர் பேசியதாவது:
தேசிய தலைநகரில் துாய்மையை மேம்படுத்துவதற்காக மூன்று மாத கால சிறப்பு இயக்கத்தை டில்லி மாநகராட்சி நடத்த வேண்டும்.
காஜிப்பூர், பால்ஸ்வா, ஓக்லா ஆகிய மூன்று குப்பைக் கிடங்குகளிலும் கழிவுகளை அகற்றுவதில் சுணக்கம் ஏற்படுகிறது. இங்கு தேவையான இயந்திரங்களை நிறுவி, பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
இந்த மூன்று கிடங்குகளும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மேம்படுத்த வேண்டும். இங்குள்ள கழிவுகளை முழுமையாக அகற்றிய பிறகு, மக்களுக்கு பயன்படும் வகையில் விரிவான திட்டத்தை மாநகராட்சி தயாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
நரேலா, காஜிப்பூர் ஆகிய இரண்டு கிடங்குகளில் கழிவுகளிலிருந்து மின்சார உற்பத்தி நிலையங்களின் கட்டுமானத்தை விரைவாக முடிக்க வேண்டும்.
ஓக்லா, தெஹ்கண்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் துவங்க வேண்டும்.
டில்லி மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதி, எந்த சூழ்நிலையிலும் நிறைவேற்றப்படும். இந்த முயற்சியில் எந்த அலட்சியமும் பொறுத்துக்கொள்ளப்படாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில்குப்பைக் கிடங்குகளில் பணிகளை விரைவுபடுத்துவதற்கான விரிவான செயல் திட்டம் முன்வைக்கப்பட்டது.

