ரூ.100 கோடி அரசு நிலம் முறைகேடு தாசில்தார் உட்பட மூவரிடம் விசாரணை
ரூ.100 கோடி அரசு நிலம் முறைகேடு தாசில்தார் உட்பட மூவரிடம் விசாரணை
ADDED : ஜன 07, 2025 06:32 AM
தங்கவயல்: தங்கவயல் தாலுகாவில் 523 ஏக்கர் அரசு நிலத்தை, 229 பேருக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி வருகிறது.
தகவல் சட்டம்
தங்கவயல் தாலுகாவில் 2022- - 2023 ம் ஆண்டில் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் ஒதுக்குவதாக கூறி, பெரும் மோசடி நடந்துள்ளது.
தங்கவயல் தாலுகாவில் 2022- - 23 ல் தாசில்தாராக கே.என்.சுஜாதா, துணை தாசில்தாராக கே.சி.சுரேஷ், வருவாய் துறையின் இரண்டாம் நிலை ஊழியராக ஆர்.பவன் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் 523 ஏக்கர் அரசு நிலத்தை, முறைகேடாக 229 பேருக்கு வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை அருகே உள்ள கங்கதொட்டி கிராமத்தை சேர்ந்த தன்னார்வலர் வெங்கடேஷ் கவுடா என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், யார் யாருக்கு எங்கு நிலம் ஒதுக்கப்பட்டது என்ற விபரத்தை கேட்டு பெற்றுள்ளார்.
'நகராட்சி பகுதியில் இருந்து 7 கி.மீ.,க்குள் வனப்பகுதி அல்லது அரசு நிலத்தை நிலம் இல்லாதவர்களுக்கு ஒதுக்க கூடாது' என்று சட்டம் உள்ளது.
ஆனால், தங்கவயல் நகராட்சி பகுதிக்கு மூன்று கி.மீ., தொலைவில் சட்ட விரோதமாகவும், இறந்தவர் பெயர்களிலும் நிலம் ஒதுக்கியது தெரியவந்தது.
எனவே உரிய ஆதாரங்களுடன், கோலார் மாவட்ட லோக் ஆயுக்தாவிடம் 2024 அக்டோபர் 9ல் புகார் செய்தார்.
புகாரில், 'பலகோடி ரூபாய் மதிப்புள்ள 523 ஏக்கர் அரசு நிலம், 229 பேருக்கு வழங்கியதில் பெரும் மோசடி நடந்துள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று  கோரியிருந்தார்.
இதன் மீது, தாசில்தார் கே.என்.சுஜாதா, துணை தாசில்தார் கே.சி.சுரேஷ், வருவாய்த்துறையின் இரண்டாம் நிலை ஊழியர் ஆர்.பவன் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் கிரிமினல்  வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
40 கோப்புகள்
கோலார் தாசில்தார் விஜயண்ணா, பங்கார்பேட்டை தாசில்தார் தயானந்தா, வருவாய்த் துறை அதிகாரி பாலாஜி ஆகியோர் விசாரணை நடத்துமாறு கோலார்  மாவட்ட லோக் ஆயுக்தா உத்தரவிட்டது.
விசாரணையில், 40 கோப்புகள் முறைகேடாக உள்ளதை கண்டறிந்தனர். 2024 டிசம்பரில், கோலார் மாவட்ட லோக் ஆயுக்தாவிடம் ஒப்படைத்தனர். இது பற்றி, லோக் ஆயுக்தா ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டது.
மொத்தம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்டதால் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக மாநில லோக் ஆயுக்தா ஆணையர் உத்தரவின்படி, கோலார் மாவட்ட லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் ரேணுகா விசாரணை அதிகாரியாக, 2025 ஜனவரி 1 ல் நியமிக்கப்பட்டார்.
முறைகேடு செய்ததாக தாசில்தார் கே.என்.சுஜாதா, துணை தாசில்தார் கே.சி.சுரேஷ், வருவாய்த் துறை ஊழியர் ஆர்.பவன் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

