ADDED : ஏப் 17, 2025 01:30 AM

புவனேஸ்வர் : ஒடிஷாவில், அரசு நிர்வாகத்தில், 'டிஜிட்டல்' திறன் உடைய பணியாளர்களை உருவாக்கும் நோக்கில் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து மூன்று மாத, 'ஆன்லைன்' பயிற்சியை கட்டாயமாக்கி உள்ளனர்.
ஒடிஷாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, அரசு துறையில் உள்ள அதிகாரிகள் அனைவருக்கும் மூன்று மாத ஆன்லைன் ஏ.ஐ., பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்துறைச் செயலர் மனோஜ் அஹுஜா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அனைத்து துறை செயலர்களும் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள், மூன்று மாத ஆன்லைன் ஏ.ஐ., பயிற்சி மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும். இந்த முயற்சி, டிஜிட்டல் திறன்மிக்க, எதிர்காலத்திற்கு ஏற்ற பணியாளர்களை உருவாக்கும்.
புதுமையான இந்த தொழில்நுட்பம் அரசு செயல்படும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் உடையது. அரசு அதிகாரிகள் ஏ.ஐ.,யின் பயன்பாடு குறித்த நடைமுறை அறிவை பெறுவது அவசியம். இந்த தொழில்நுட்பத்தை புரிந்துகொண்டால், அனைத்து விபரங்களை அறிந்து முடிவெடுக்கலாம். பொது மக்கள் சார்ந்த கொள்கைகளை வடிவமைப்பது, பெரிய அளவிலான தரவுகளை ஆராய முடியும்.
எனவே, நம்பகமான தளங்களில் இலவசமாக கிடைக்கும் ஏ.ஐ., தொடர்பான பயிற்சியை, மூன்று மாதத்திற்குள் முடித்து சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இணையத்தில் ஒரு தகவலை தேடி அறிவதை, செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., தொழில்நுட்பம் இன்னும் எளிமையாக்கி உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த துறை சார்ந்த கேள்விகளுக்கும் எளிதாக பதிலை பெற முடியும்.
தரவுகளை தந்து ஆராயலாம், சிக்கலான விஷயங்களை எளிமையாக விளக்கச் சொல்லி கேட்கலாம். இவற்றை சில வினாடிகளில் ஏ.ஐ., தொழில்நுட்பம் செய்து முடிக்கும்.