ADDED : மார் 21, 2025 04:12 AM
பெங்களூரு : பெங்களூரு, ஜெ.ஜெ., நகரை சேர்ந்தவர்கள் சையத் யராப், ஷபாஷ் கான், இம்ரான் பாஷா. இவர்கள் மூவரும் போதைப்பொருள் விற்பனை செய்து வந்தனர்.
இவர்கள், கடந்த 2023, ஜனவரியில் குட்டடஹள்ளி பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாதேவசாமி, அவர்களை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 22 எல்.எஸ்.டி., அட்டைகள், 25 கிராம் மெத்தம்பேட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு நேற்று 33வது பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில், நீதிபதி விஜய் தேவராஜ் அர்ஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மூன்று பேர் மீதான குற்றச்சாட்டும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானது. இதனால், மூவருக்கும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

