கெஜ்ரிவாலை கைது செய்த நேரம்: அமலாக்கத்துறை பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கெஜ்ரிவாலை கைது செய்த நேரம்: அமலாக்கத்துறை பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ADDED : மே 01, 2024 06:56 PM

புதுடில்லி : மதுபான கொள்கை வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்த நேரம் குறித்து மே-3 ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறை அதிகாரிகளால், மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவரது நீதிமன்ற காவல், வரும் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிரான கெஜ்ரிவாலின் மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜுவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
பின் நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது:
வாழ்வும், சுதந்திரமும் மிக முக்கியமானது. அதை நீங்கள் மறுக்க முடியாது. முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்பான வழக்கில், அமலாக்கத் துறையினர் தங்களுக்கு சில தரவுகள் கிடைத்ததாகக் கூறியிருந்தனர்.ஆனால், கெஜ்ரிவால் வழக்கில் அவ்வாறு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
அதுமட்டுமின்றி லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கும் விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை துவக்கத்துக்கும், கைதுக்கும் இடையில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்பதையும் விளக்குங்கள். இதற்கான பதிலை அமலாக்கத் துறை அளிக்க வேண்டும். அடுத்த விசாரணையை மே.03 தேதி ஒத்தி வைத்தனர்.