மேற்குவங்கத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு; கிராமமே புதையுண்ட துயர காட்சிகள்!
மேற்குவங்கத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு; கிராமமே புதையுண்ட துயர காட்சிகள்!
UPDATED : அக் 06, 2025 11:40 AM
ADDED : அக் 06, 2025 11:37 AM

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் காணாமல் போயுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இமயமலையை ஒட்டி அமைந்துள்ள மலைப் பிரதேசங்களான டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி உள்ளிட்ட இடங்களில் அதிகனமழை கொட்டியது. 12 மணி நேரத்தில், 30 செ.மீ., மழை பதிவானதால், மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் உள்ள மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள், கடைகள், வாகனங்கள், மரங்கள் அடித்துச் செல்லப்பட்டன. தொடர் மழையால், டார்ஜிலிங்கில் மிரிக் சுகியோபோக்ரி சாலையில் உள்ள மலைப்பாதையில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. சேறும், சகதியும் நிறைந்துள்ளதால், அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
அப்பகுதியில் இருந்த வீடுகளும், கடைகளும் மண்ணில் புதைந்தன. சர்சாலி, மிரிக் பஸ்தி, ஜாஸ்பிர்கான், தர் காவ்ன், நாக்ரகாட்டா பகுதி களிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் காணாமல் போயுள்ளனர்.