ADDED : டிச 27, 2024 05:42 AM
பெங்களூரு: கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, தொடர் விடுமுறை வந்ததால், வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து பெருமளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளின் அறைகள், 'புல்' ஆகி விட்டன.
புத்தாண்டை கொண்டாடவும், வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் கர்நாடகாவுக்கு வருகின்றனர்.
பெங்களூரு, மைசூரு, குடகு, உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா என, அனைத்து மாவட்டங்களிலும், சுற்றுலா பயணியர் குவிந்து உள்ளனர். சாமுண்டி மலை, மிருகக்காட்சி சாலை, கே.ஆர்.எஸ்., ஹிமாவத் கோபாலசுவாமி, பண்டிப்பூர், ஹம்பி, நாகரஹொளே, கோகர்ணா உட்பட சுற்றுலா தலங்களில் பெருமளவில் சுற்றுலா பயணியர் குவிந்துள்ளனர்.
ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள், ஹோம் ஸ்டேக்களின் அறைகள், ஜனவரி 1ம் தேதி வரை பதிவாகியுள்ளன. புதிதாக வருவோர் அறைகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
சுற்றுலா வாகனங்கள் வருகையால், போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்துள்ளது. 'ஜனவரி முதல் வாரம் வரை, இதே சூழ்நிலை இருக்கும்' என, சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.