சிவ மகாபுராண கதை நிகழ்ச்சி 27 வரை போக்குவரத்து மாற்றம்
சிவ மகாபுராண கதை நிகழ்ச்சி 27 வரை போக்குவரத்து மாற்றம்
ADDED : மே 21, 2025 03:25 AM
புதுடில்லி:புராரி நிரங்கரி மைதானத்தில் நேற்று துவங்கிய, சிவ மகாபுராண கதை நிகழ்ச்சியை முன்னிட்டு, 27ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
புராரி நிரங்கரி மைதானத்தில், சிவ மகாபுராண கதை நிகழ்ச்சி நேற்று துவங்கியுள்ளது. வரும், 27ம் தேதி நிறைவடைகிறது.
இந்த வாரம் முழுதும் காலை 8:00 மணி முதல் நள்ளிரவு வரை நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, நெரிசலைத் தவிர்க்க போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுப்பாதைகள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்களும் முடிவு செய்யப்பட்டுள்ளன.
அரிஹந்த் மார்க்கில் முகுந்த்பூர் சவுக் முதல் ஆசாத்பூர் சவுக் வரை, அவுட்டர் ரிங் ரோட்டில் புராரி சவுக் முதல் முகுந்த்பூர் சவுக் வரை, சாந்தி ஸ்வரூப் தியாகி மார்க் முதல் பாய் பரமானந்த் மார்க் வரை, புராரி சவுக் முதல் பரமானந்த் காலனி வரை இரு பாதைகளிலும் வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது.
இந்தப் பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மஜ்லிஸ் பார்க் மெட்ரோ நிலையம் அருகே தாரா சிங் சவுக் மற்றும் ஷா ஆலம் பந்த் சாலைக்கு கொண்டு செல்லப்படும்.
அதேபோல, கூட்டத்தைப் பொறுத்து ஷா ஆலம் பந்த் சாலை மற்றும் பாய் பரமானந்த் மார்க்கில் ஒரு வழிப்பாதை மூடப்படும்.
யோகராஜ் காலனி சிக்னல் மற்றும் ஷா ஆலம் பந்த் சாலையில் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாந்தி ஸ்வரூப் தியாகி மார்க், பாய் பரமானந்த் மார்க்கில் புராரி சவுக் முதல் கிங்ஸ்வே கேம்ப் வரை, அவுட்டர் ரிங் ரோட்டில் புராரி முதல் முகுந்த்பூர் சவுக் வரை, அரிஹந்த் மார்க்கில் முகுந்த்பூர் முதல் ஆசாத்பூர் வரை மற்றும் ஷா ஆலம் பந்த் மார்க் ஆகியவற்றை பயணியர் தவிர்த்து, மாற்றுப் பாதைகளை பயன்படுத்த வேண்டும்.
சொந்த வண்டி உபயோகத்தை தவிர்த்து, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடைய மஜ்லிஸ் பார்க் மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில் வரலாம்.
தனியார் வாகனங்கள் தாராசிங் சவுக் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் நிறுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.