சமூக ஊடகங்களை கண்காணிக்க போக்குவரத்து போலீசுக்கு உத்தரவு
சமூக ஊடகங்களை கண்காணிக்க போக்குவரத்து போலீசுக்கு உத்தரவு
ADDED : அக் 19, 2025 12:45 AM
புதுடில்லி: “சமூக ஊடகங்களை தீவிரமாக கண்காணித்து, போக்குவரத்து நெரிசல், சிக்னல் செயலிழப்பு மற்றும் வாகன செயலிழப்புகள் தொடர்பான பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு சிறப்பு கமிஷனர் அஜய் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார்.
டில்லி மாநகர போக்குவரத்து போலீசாருக்கு, சிறப்பு கமிஷனர் அஜய் சவுத்ரி வெளியிட்டுள்ள உத்தரவு:
போக்குவரத்துப் பிரிவு போலீஸ் துணை கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் சமூக ஊடங்களங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல், சிக்னல் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் பதிவிடுவதை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் புகார் செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடம் பெற வேண்டும். குறைகள் தீர்க்கப்பட்டதை சமூக ஊடகங்களில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக திங்கட்கிழமை தோறும் வாராந்திர அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.