ஜார்க்கண்டில் போலீஸ் தேர்வுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்
ஜார்க்கண்டில் போலீஸ் தேர்வுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்
ADDED : செப் 01, 2024 01:06 PM

ராஞ்சி: ஜார்க்கண்டில் போலீஸ் பணியில் சேர உடற்தகுதி தேர்வுக்கு சென்றவர்கள் சிலர் உயிரிழந்தனர். முறையான ஏற்பாடுகளை செய்யாததே இதற்கு காரணம் என பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.
ஜார்க்கண்டில் போலீஸ் கான்ஸ்டபிளை தேர்வு செய்வதற்காக ராஞ்சி, ஹசாரிபாக், பலாமு, சாகேப் கன்ஜ் உள்ளிட்ட இடங்களில் உடற்தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்வில் பங்கேற்ற சிலர் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தனர். தேர்வு நடந்த மையங்களில் குடிநீர், மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இச்சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள பா.ஜ., தேர்வு மையங்களில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. நள்ளிரவு முதல் மறுநாள் காலை வரை தேர்வர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து இருந்தனர். கடும் வெயிலில் ஓட்டப்போட்டியில் பங்கேற்றனர். மையங்களில் போதிய வசதி செய்யப்படவில்லை. இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதுடன், இச்சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.