ADDED : ஜன 23, 2025 05:09 AM

உத்தர கன்னடா: கர்நாடகாவில் காய்கறிகள், பழங்கள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்ததில், அதில் பயணித்த வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், சாவனுாரை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் 25 பேர், நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய, உத்தர கன்னடா மாவட்டம், கும்டாவுக்கு, மினி லாரியில் கிளம்பினர்.
நேற்று அதிகாலை 5:00 மணியளவில், உத்தர கன்னடா மாவட்டம், எல்லாபூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
அடர்ந்த பனி மூட்டம் காரணாக, அவ்வழியாக சென்றவர்களுக்கு தெரியவில்லை. ஒரு மணி நேரத்துக்கு பின், லாரி கவிழ்ந்திருப்பதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், கிரேன் வாயிலாக லாரியை அப்புறப்படுத்திய போது, காய்கறிகள் மூட்டைகளின் அடியில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது தெரிந்தது.
இதில், பயாஸ் ஜம்கண்டி, 45, வாசிம் முடகேரி, 35, இஜாஸ் முல்லா, 20, சாதிக் பாஷா, 30, குலாம் ஹுசேன், 40, இம்தியாஸ் முலகேரி, 36, அல்பாஸ் ஜபர், 25, ஜிலானி அப்துல் ஜகடி, 25, அஸ்லாம் பாபுலி பென்னி, 24, ஜலால் தாரா, 30, ஆகிய 10 பேர் நசுங்கி உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும், லாரியில் சிக்கி உயிருக்கு போராடியவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
௫௦ அடி பள்ளம்
சம்பவ இடத்தை பார்வையிட்ட உத்தர கன்னடா எஸ்.பி., நாராயண் கூறுகையில், ''அடர்ந்த பனி மூட்டம் காரணமாக, பின்னால் வந்த வாகனத்துக்கு வழி விட இடதுபக்கம் திரும்பும் போது, சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், லாரியில் பயணித்தவர்கள் மீது காய்கறிகள், பழங்கள் மூட்டைகள் விழுந்ததால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்,'' என்றார்.
காயமடைந்தவர்களை காலை 6:30 மணிக்கு கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, டியூட்டி டாக்டர்கள் யாரும் இல்லை. தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள், டாக்டர் இல்லாதது கண்டு அதிருப்தி தெரிவித்தனர்.
'விபத்தில் காயமடைந்த நேரத்திலும் கூட, சிகிச்சை அளிப்பதை விட, விண்ணப்பம் பூர்த்தி செய்து, ஆதார் அடையாள அட்டை காண்பியுங்கள் என்கின்றனர். முக்கியஸ்தர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்றால் உடனடியாக சிகிச்சை அளிக்கின்றனர்' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இறுதி ச்சடங்கு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை, ஷிகாவி காங்கிரஸ் எம்.எல்.ஏ., யாசிர் அகமது பதான் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து தொடர்பாக, முதல்வர் சித்தராமையாவை தொடர்பு கொண்டு சம்பவத்தை விளக்கினார். விபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்தார்.
ஹாவேரி கூடுதல் எஸ்.பி., லட்சுமண், சாவனுாருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஒரே ஊரை சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததால், அப்பகுதியினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
இறந்தவர்களுக்கு நேற்று இரவு இறுதி சடங்கு நடந்தது.