ரயில் பயணியர் முன்பதிவு அட்டவணை இனி 10 மணி நேரம் முன் வெளியாகும்
ரயில் பயணியர் முன்பதிவு அட்டவணை இனி 10 மணி நேரம் முன் வெளியாகும்
UPDATED : டிச 18, 2025 05:47 AM
ADDED : டிச 18, 2025 01:55 AM

புதுடில்லி: ரயில் பயணியர் தங்கள் டிக்கெட் முன்பதிவின் இறுதி நிலையை, இனி ரயில் புறப்படுவதற்கு, 10 மணி நேரத்துக்கு முன்னரே அறிந்துகொள்ளும் வகையில் அட்டவணை வெளியீட்டில் ரயில்வே நிர்வாகம் மாற்றம் செய்துள்ளது.
ரயில் பயணியர் டிக்கெட்டுகளை இரண்டு மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலை, ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன் வெளியிடப்பட்டு வந்தது. கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் ரத்தாவதால், பயணத்தை மாற்றி அமைக்க பயணியர் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, முன்பதிவு அட்டவணையை எட்டு மணி நேரத்துக்கு முன் வெளியிட வேண்டும் என பயணியர் சங்கங்கள் பரிந்துரைத்தன. அந்த கோரிக்கையை ஏற்று, அனைத்து மண்டல ரயில்வேயும், கடந்த ஜூலையில் இருந்து எட்டு மணி நேரத்துக்கு முன் அட்ட வணை வெளியிட்டு வருகின்றன.
தற்போது அதை 10 மணி நேரமாக நீட்டித்துள்ளனர். அதன்படி இனி காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு, முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கு அட்டவணை தயாரிக்கப்பட்டு, பயணியருக்கு அறிவிப்பு செல்லும்.
இதர ரயில்களுக்கு, அவை புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும். இதை உடனடியாக அமல்படுத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

