மேற்கு வங்கத்தில் ரயில்கள் மோதல்: 9 பேர் பலி; 60 க்கும் மேற்பட்டோர் காயம்
மேற்கு வங்கத்தில் ரயில்கள் மோதல்: 9 பேர் பலி; 60 க்கும் மேற்பட்டோர் காயம்
UPDATED : ஜூன் 18, 2024 02:01 AM
ADDED : ஜூன் 17, 2024 10:21 AM
முழு விபரம்

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.60 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். சம்பவ இடத்தில் மீட்பு படையினர் ரயில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
உதவி எண்கள்:
விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்தனர். 60 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இவர்களை மீட்பு படையினர் போராடி மீட்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விபத்து தொடர்பாக, 03323508794, 03323833326 என்ற எண்களில் தகவல் பெறலாம் என ரயில்வே துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.
விபத்து நடந்த பகுதியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்று
ஆய்வு செய்தார். பின்னர், காயமடைந்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
போர்க்கால நடவடிக்கை
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மீட்பு படையினர் மற்றும் மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பேரிடர் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். மீட்பு பணிகள் நடந்து வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வருத்தம்
'மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன,' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,
'பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிய விபத்தில், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ரயில் பாதையில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி, இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ரயில்வே போக்குவரத்தை சரி வர கண்காணிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
கேள்வி எழுப்புவோம்
'மேற்குவங்க மாநிலத்தில் நடந்த ரயில் விபத்துக்கு பா.ஜ., அரசு பொறுப்பேற்க வேண்டும். ரயில் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. பா.ஜ., அரசின் அலட்சியம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்.
கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் அதிகரித்ததற்கு பா.ஜ., அரசின் நிர்வாக அலட்சியமே காரணம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என காங்., எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.
This breaking news story is being updated and more details will be published shortly. Please refresh the page for the fullest version.