சாலுமரத திம்மக்கா பெயரில் மாலுாரில் 'விருட்ச வனம்'
சாலுமரத திம்மக்கா பெயரில் மாலுாரில் 'விருட்ச வனம்'
ADDED : நவ 22, 2024 07:19 AM
மாலுார்: கோலார் மாவட்டம், மாலுாரில் பூங்கா இல்லாத குறையை போக்க, முதியோர், சிறுவர்கள் விரும்பும் வகையில் சாலுமரத திம்மக்கா பெயரில், 'விருட்ச வனம்' அமைத்துள்ளனர்.
360 ஏக்கர்
மாலுாரில் ஒருசில பூங்காக்கள் இருந்தும், பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இங்குள்ள உடற்பயிற்சி கருவிகள், குழந்தைகள் விளையாடும் சாதனங்கள் உடைந்து நாசமாகி உள்ளன. இதனை பழுது பார்க்க அக்கறை செலுத்துவோர் யாரும் இல்லை.
இந்நிலையில், சுற்றுச் சூழலுக்கு ஏற்றார்போல், மாலுாரின் ஒயிட் கார்டன் அருகே, குரண்டஹள்ளி என்ற இடத்தில் 360 ஏக்கரில் வனப்பகுதியில் விருட்ச வனத்தை உருவாக்கி உள்ளனர்.
முதியோர், சிறுவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொழுது போக்கு வனம் அமைந்துள்ளது. இங்கு சந்தனம், மூங்கில் மரங்கள் நிறைந்துள்ளன. குழந்தைகள் விளையாடுவதற்கு பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள்; பலரையும் ஈர்க்கும் வகையில் படிக்கட்டு மில், ரோயிங் மிஷின், ஏர்டைன், ஸ்பின் பைக், ஜேக்கப்ஸ் லேடர், ஸ்கைகர்க் அமைத்துள்ளனர்.
பசுமை புரட்சி
உடற்பயிற்சி சாதனங்கள், கருவிகள் அமைந்திருப்பதால் வனப்பூங்காவை ஒட்டியுள்ள குரண்ட ஹள்ளி, புரசன ஹள்ளி, மங்காபூர், மயிலாந்த ஹள்ளி, குடியனுார் என பல்வேறு கிராமங்களை சேர்ந்த முதியோர், பெற்றோர், குழந்தைகள் குடும்பம் குடும்பமாக வந்து செல்கின்றனர். இது, பலரையும் கவர்ந்துள்ளது.
மரங்களை நட்டு, மாநிலத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி வரும், 'சாலுமரத திம்மக்கா' பெயரை சூட்டி, அவருக்கு கவுரவத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
பள்ளி, கல்லுாரிகளின் மாணவர்களும் வார இறுதி நாட்களில் அதிகளவில் வந்து செல்கின்றனர்.