ஹைதராபாத் பல்கலையில் வெட்டப்படும் மரங்கள்; தெலுங்கானா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
ஹைதராபாத் பல்கலையில் வெட்டப்படும் மரங்கள்; தெலுங்கானா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
ADDED : ஏப் 17, 2025 02:33 AM

புதுடில்லி: ஹைதராபாத் பல்கலையில் மரங்கள் வெட்டப்படும் விவகாரத்தில், 'சுற்றுச் சூழலை பாதுகாக்க எந்த வழியையும் பயன்படுத்த தயங்க மாட்டோம்' என, உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹைதராபாத் பல்கலை அருகே, 400 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது.
இங்கு, அரிய மரங்கள், அரியவகை விலங்கினங்கள், பறவைகள் வசிக்கின்றன. கஞ்சா கச்சிபவுலி வனம் என அழைக்கப்படும் இந்த இடத்தில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தெலுங்கானா அரசு முடிவு செய்து, அங்கிருந்த மரங்களை வெட்டி வருகிறது.
இதற்கு ஹைதராபாத் பல்கலை மாணவர்கள், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
கடந்த 3ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பல்கலை அருகே உள்ள 400 ஏக்கர் வனத்தில் எந்தவொரு பணியையும் மேற்கொள்ளக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, நீதிபதிகள் கூறியதாவது:
கஞ்சா கச்சிபவுலி வனப்பகுதியில், மிக அவசரமாக பெரிய, பெரிய மரங்களை வெட்டுவதற்கான அவசியம் என்ன? வனத்தில், மரங்களை வெட்டியபோது, உயிர் பிழைப்பதற்காக பாதுகாப்பு தேடி விலங்குகள் ஓடிய வீடியோ காட்சிகள் அதிர்ச்சியளிக்கிறது.
அங்குள்ள வன உயிரினங்களை பாதுகாக்க தெலுங்கானா மாநில வனத்துறை தலைமை அதிகாரி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுச் சூழல் மற்றும் சூழலியலை பாதுகாப்பதற்காக, எந்த வழியையும் பயன்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம். 400 ஏக்கர் நிலத்தை மீண்டும் சரி செய்வது குறித்து, தெலுங்கானா அரசு ஒரு திட்டத்தை வகுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
வழக்கின் அடுத்த விசாரணை மே 15-க்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரையிலும் ஒரு மரம் கூட, வெட்டப்படக் கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.