ADDED : ஜூலை 25, 2011 10:17 PM
ஐதராபாத் : ஆந்திராவில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.,) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவிகளை மீண்டும் ராஜினாமா செய்துள்ளனர்.
ஆந்திராவில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கானா பகுதி மக்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில், மத்திய அரசு அலட்சியமாக செயல்பட்டதையடுத்து, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த, டி.ஆர்.எஸ்., காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இவர்களின் ராஜினாமா குறித்து, எந்த முடிவும் எடுக்காமல் அமைதிக் காத்து வந்த சபாநாயகர் மனோகர், இரண்டு நாட்களுக்கு முன், தன் முடிவை அறிவித்தார். 'தெலுங்கானா விஷயத்தில், உணர்ச்சிவசப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ.,க்கள், இந்த முடிவை எடுத்துள்ளனர். எனவே, அவர்களின் ராஜினாமாவை ஏற்க போவது இல்லை'என, சபாநாயகர் தெரிவித்தார். இதுகுறித்து கடுமையாக விமர்சித்த, டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவ்,'சபாநாயகரின் முடிவு, ஜனநாயகத்துக்கு விரோதமானது'என்றார். இந்நிலையில், டி.ஆர்.எஸ்., கட்சியை சேர்ந்த, 11 எம்.எல்.ஏ.,க்களும், தங்களது பதவிகளை மீண்டும் ராஜினாமா செய்து, அதற்கான கடிதங்களை சபாநாயகருக்கு 'பேக்ஸ்' மூலம் நேற்று அனுப்பி வைத்தனர்.