திருப்பம்! 4 ராஜ்யசபா பதவிக்கு 5 வேட்பாளர்கள் போட்டி ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணியின் அதிரடி வியூகம்
திருப்பம்! 4 ராஜ்யசபா பதவிக்கு 5 வேட்பாளர்கள் போட்டி ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணியின் அதிரடி வியூகம்
ADDED : பிப் 16, 2024 07:30 AM

பெங்களூரு: கர்நாடகாவில் காலியாக இருக்கும், நான்கு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, முக்கிய அரசியல் கட்சிகளின் ஐந்து வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் வெற்றியை தட்டிப்பறிக்க, ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி அதிரடி வியூகம் வகுத்துள்ளது.
கர்நாடகாவில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட காங்கிரசின் ஹனுமந்தையா, சையத் நாசிர் ஹுசேன், சந்திரசேகர்; பா.ஜ.,வின் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலம், வரும் ஏப்ரல் 2ம் தேதி முடிவடைகிறது. இவர்களால் காலியாகும் இடங்களுக்கு, வரும் 27ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 8ம் தேதி துவங்கியது. மனு தாக்கல் செய்ய, நேற்று கடைசி நாள். எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், நான்கு பதவிகளில், காங்கிரஸ் - மூன்று, பா.ஜ.,வுக்கு ஒரு எம்.பி., பதவி கிடைக்கும்.
இதன் அடிப்படையில், பா.ஜ., சார்பில் நாராயண கிருஷ்ணாச பந்தகே; காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் தேசிய பொருளாளர் அஜய் மக்கன், தற்போது பதவிக்காலம் நிறைவுபெறும் சையத் நாசிர் உசேன், சந்திரசேகர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
பெங்களூரு விதான் சவுதாவின் முதல் மாடியில் உள்ள சட்டசபை செயலரும், தேர்தல் அதிகாரியுமான விசாலாட்சியிடம் நால்வரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பா.ஜ., வேட்பாளருடன், மாநில தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மாநில பொது செயலர் சுனில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
குபேந்திர ரெட்டி
காங்கிரஸ் வேட்பாளர்களுடன், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் பிரியங்க் கார்கே, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் உடனிருந்தனர்.
சிறிது நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில், ம.ஜ.த., வேட்பாளராக முன்னாள் எம்.பி., குபேந்திர ரெட்டி, முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுடன் வந்து மனு தாக்கல் செய்தார்.
மேலும், சுயேச்சைகள் உட்பட மொத்தம் ஏழு வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்களை திரும்ப பெறுவதற்கு, 20ம் தேதி கடைசி நாள். தேவைப்பட்டால், வரும் 27ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கும்.
46 ஓட்டுகள்
மொத்தம் நான்கு எம்.பி., பதவிகளுக்கு மூன்று அரசியல் கட்சிகளின் ஐந்து வேட்பாளர்களுக்கு இடையே தீவிர போட்டி ஏற்பட்டுள்ளது.
ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு, 46 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் தேவை. காங்கிரசிடம் சபாநாயகர் சேர்த்து, 135 ஓட்டுகள் உள்ளன.
பா.ஜ.,வுக்கு 66 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், ஒரு வேட்பாளருக்கு 46 ஓட்டுகள் சென்றுவிட்டால், மீதி 20 ஓட்டுகள் இருக்கும். இத்துடன், ம.ஜ.த.,விடம் 19 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் உள்ளன. ஆக மொத்தம் கூட்டணி கட்சிகளிடம், 39 ஓட்டுகள் மீதம் உள்ளன.
ம.ஜ.த.,வின் குபேந்திர ரெட்டி வெற்றி பெறுவதற்கு, இன்னும் ஏழு எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் மட்டும் தேவை.
இதற்கு, சுயேச்சைகள் இருவர் மற்றும் பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ,வான ஜனார்த்தன ரெட்டி ஆகியோருடன், காங்கிரசில் அதிருப்தியில் இருக்கும் சில எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை திரட்டலாம் என்பது பா.ஜ., - ம.ஜ.த.,வின் வியூகமாகும்.
எதிர்க்கட்சி கூட்டணி, 'ஆப்பரேஷன்தாமரை' செய்தால், இதற்கு பதிலடி கொடுக்க காங்கிரசும் ஆப்பரேஷன் செய்ய திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''எங்களுக்கும் அனைத்து கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். மனசாட்சி ஓட்டுகள் எங்களுக்கு கிடைக்கும்,'' என்றார்.